Sunday, October 2, 2016

கடலைக் களவாடுபவள்


கடலாடி மகிழும் மகள்
நம்ப மறுக்கிறாள்
கடலை 
உடன் எடுத்துச்செல்லுதல்
இயலாதென்பதை
தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள்
குடிபுக முடியாதென்பதையும்
ஆமை ஓட்டிற்குள் மழைக்கு
ஒதுங்கமுடியாதென்பதயும்
பதறப் பதற
கிளிஞ்சல்களைப்
பொறுக்கத் தொடங்குபவள்
அரற்றிக்கொண்டு வருகிறாள்
வீடுவரை
உணவை மறுதலித்து
விழிகளை நிறைத்தபடி
உறங்கிப்போகுமவள்
விரலிடுக்கில் உறுத்தும்
மணலும்
உள்ளங்கைக்குள் புதையும்
கிளிஞ்சல்களும்
கடலுக்கு
வலைவீசிக்கொண்டிருக்கும்
நடுநிசிப் பொழுதில்
நடுங்கும் நட்சத்திரங்கள்
இமை தாழ்த்தி
உறைகின்றன
****
நன்றி: மலைகள். காம்

No comments:

Post a Comment