Sunday, October 2, 2016

அலமாரியில்
அத்தனைப் புத்தகங்கள் மீதும் வருடிக்கடக்கின்றன 
விரல்கள்
மின்விசிறியின் 
பறக்கும் இறக்கைகளை பிடித்துவிட முயன்றுகொண்டிருக்கின்றன கண்கள். 
இக்கோடையின் நிசப்தம்
முன் நெற்றியில் துளிர்த்து வழிகிறது
கால் பெருவிரலை
ஓயாமல் முத்திக்கொண்டிருக்கிறது செம்மீன்
குட்டிச்சுழல் ஒன்று
உருவாகி உள்ளிழுக்கிறது
இப்பிரபஞ்சம்
முழுவதையும்

கடலைக் களவாடுபவள்


கடலாடி மகிழும் மகள்
நம்ப மறுக்கிறாள்
கடலை 
உடன் எடுத்துச்செல்லுதல்
இயலாதென்பதை
தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள்
குடிபுக முடியாதென்பதையும்
ஆமை ஓட்டிற்குள் மழைக்கு
ஒதுங்கமுடியாதென்பதயும்
பதறப் பதற
கிளிஞ்சல்களைப்
பொறுக்கத் தொடங்குபவள்
அரற்றிக்கொண்டு வருகிறாள்
வீடுவரை
உணவை மறுதலித்து
விழிகளை நிறைத்தபடி
உறங்கிப்போகுமவள்
விரலிடுக்கில் உறுத்தும்
மணலும்
உள்ளங்கைக்குள் புதையும்
கிளிஞ்சல்களும்
கடலுக்கு
வலைவீசிக்கொண்டிருக்கும்
நடுநிசிப் பொழுதில்
நடுங்கும் நட்சத்திரங்கள்
இமை தாழ்த்தி
உறைகின்றன
****
நன்றி: மலைகள். காம்
மிகுந்த
சந்தோசப்பதற்றத்துடன்
தேர்வு அறைக்குள் நுழைகிறீர்கள்
அச்சிடப்பட்ட விடைத்தாள்
உங்கள் கைகளில் தரப்படுகிறது
உங்கள் மண்டைக்குள்
வேறு விடைகள் இருக்கின்றனவா?!
நன்றாக அதை சுருட்டிக் கசக்குங்கள்
கடைமூளையில்
ஒரு குப்பைத்தொட்டித் தெரிகிறதா?
எழுதுகோலும், அழிப்பானும்
உடனெடுத்து வந்தீரா?!
இத்தனை விளையாட்டுத்தனத்திற்கு
அனுமதி இல்லை
மேலும்
குப்பைத் தொட்டி நிறைவதில்
ஆட்சேபனை இல்லை
மறைத்து வைத்திருக்கும்
தூரிகையை
வெளியில் எடுங்கள்
கடைசிமணி அடிக்கும் வரை
முதுகு சொறியுங்கள்
அல்லது
மணிக்கட்டு நரம்பை
அறுக்கத்தொடங்குங்கள்
மிக மெதுவாய்.

மனம் ஒரு மிருகம்


வால் குழைத்து மண்டியிடும்
தோள் தாவி முகம் நக்கும்
மென் உதிரம் கசிய நகம் பதிக்கும்
தருணம் அறியாத் தருணம் ஒன்றில்
குரல்வளைக் கவ்வும்
மனமொரு வளர்ப்பு மிருகம்
சீழ் தழும்பிக் குடைந்து கொண்டிருந்த
நெடுநாள் ரணமொன்று
உடைந்தது
அல்லது
உடைத்தேன்
வெள்ளை ஆடை முழுதும் பரவும்
செந்நிறக் குருதி
பிரபஞ்சத்தின் கதவுகளைத்
திறந்துவிடுகிறது
அத்தனை ஆசுவாசமாய்
அத்தனை சுதந்திரமாய்
வகுப்பில் நெருங்கிய தோழன், தோழிகள் என்று சில ஜோடிகள் உண்டு. நிதீஷ் + மோனிஷ் , சோனாக்ஷி + ப்ரியான்ஷு , குருசரண் + ச்சார்வி. இவர்களை எப்படி பிரித்து அமரவைத்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். இதில் குருசரண், ச்சார்வி மட்டும் வெவ்வேறு பாலினம் என்பதால் சுவாரஸ்யம் கூடுதல்.

பள்ளிக்கு வந்த புதிதில் குரு தான் ச்சார்வி மேல் ரொம்ப பிரியமாக இருப்பான். அவள் ரொம்ப பந்தா பண்ணுபவளாக, அவனை பெரிதாக கவனத்தில் கொள்ளாதவளாக இருப்பாள். ஒரு முறை குரு பென்சில் முனை உடைந்துவிட்டதென்று ஷார்ப் பண்ண எழுந்தான். இவள் உடனே என் பென்சிலையும் ஷார்ப் பண்ணிட்டு வா என்று அமர்ந்தபடி கட்டளை இட்டாள். இவன் உடனே, இரு என்னோட பென்சில ஷார்ப் பண்ணிட்டு வந்து உன்னோடத ஷார்ப் பண்றேன் அப்படின்னு சொன்னதும் இவ முகத்த பாக்கணும், ம்ஹ்ம் முதல்ல என் பென்சில ஷார்ப் பண்ணிக்கொடு, இல்லன போ பேசமாட்டேன் என்று சிணுங்கிக்கொண்டு சொல்கிறாள். இருவரும் முதல் பெஞ்ச் ஆகையால் இந்த உரையாடல் , முக பாவனை எல்லாம் துல்லியமாக கண்டு நான் ரசித்துக்கொண்டிருந்தேன். அவன் சரி கொடு என்று அவள் பென்சிலை வாங்கி ஷார்ப் பண்ணிக்கொடுத்ததும் வேக வேகமாக அவனுக்கு முன்னால் எழுதி முடித்து நான் தான் first என்று நோட்டுடன் என்னிடம் ஓடி வந்தாள். இதுவே குரு முதலில் எழுதி முடித்தால் அவளுக்காக காத்திருந்து ரெண்டுபேரும் சேர்ந்து தான் வருவார்கள். நான் கூட அவனிடம் சொல்வேன், அவ உனக்காக வெயிட் பண்றாளா ? இல்லதானே ,அப்புறம் நீ மட்டும் ஏண்டா வெயிட் பண்ற என்று. அதற்கு அவனிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வரும். மேம், சார்வி சாப்பிடாம பாக்ஸ் ஐ மூடிட்டா என்று ஒரு முறை தீரஜ் என்னிடம் சொன்னபோது, இந்த குரு அவனை முறைத்துப் பார்த்து, உன்கூட காய் என்று செய்கை செய்தான். அவளை அப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்வான். ஆனா அவ பெருசா அலட்டிக்க மாட்டா.

இதெல்லாம் வருடத்தின் ஆரம்ப மாதங்களில் தான். தற்போது ஒரு நாள் குருவையும் சார்வியையும் வேறு வேறு இடத்தில் உட்கார வைத்திருந்தேன். பிள்ளைகள் எல்லாம் பழங்களின் படத்திற்கு கலர் அடித்து ஒவ்வொருவராக பேப்பரை என் மேசை மேல் வந்து வைத்துக்கொண்டிருந்தார்கள். குருவுக்கு கலர் அடிப்பதே பிடிக்காத வேலை.எப்பொழுதும் மெதுவாகத்தான் செய்வான், பலமுறை பாதியிலேயே நேரமில்லாமல் பேப்பரை வாங்கிவிடுவேன். அன்றும் அப்படி தான் முடிக்காத வெகு சிலரோடு அவனும் இருக்க, இந்த சார்வியும் குனிந்து கலர் அடித்தபடியே இருக்கவும் , இவளுமா இன்னும் முடிக்கவில்லை? என்று ஆச்சர்யத்துடன் அருகில் சென்று பார்க்கிறேன், கலர் அடித்து முடித்துவிட்டு சும்மாவாச்சும் கலர் அடிப்பது போல பென்சிலை வைத்துக்கொண்டு பாவனை செய்துகொண்டிருக்கிறாள்.

இப்பொழுதெல்லாம் அவன் கோவப்படுகிறான், அவளைப் பற்றி என்னிடம் புகார் சொல்கிறான், ஆனால் அவள் நேர் மாறாக மாறிவிட்டாள். எனினும் இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். இன்று குரு, வாயில் ரப்பரை போட்டு சப்பிக்கொண்டிருந்தான். நான் கோவமாக அவனை அருகில் அழைத்து, எப்ப பாரு எதையாவது வாய்ல கடுச்சிகிட்டே இருக்க, இரு வாய்க்கு ஸ்டேப்லர் போட்டு மூடுறேன்னு சொல்லி, இரண்டு உதட்டையும் பிடித்து இனி இப்படி செய்வியா? செய்வியா ? என்று கேட்டபடி ஸ்டேப்ளரை உதட்டருகில் கொண்டு சென்றேன். அதற்குள் பிள்ளைகள் சிலரும் கூடி விட்டனர். குரு பயந்தபடி செய்யமாட்டேன் ,செய்யமாட்டேன் என்கிறான். பார்க்கிறேன், இந்த சார்வியும், இனி அப்படி செய்யமாட்டான் ,செய்யமாட்டான் என்று அவளும் என் கை அருகில் நின்று தவித்தபடி கெஞ்சிக்கொண்டிருக்கிறாள். அவள் கண்ணெல்லாம் கலங்கி விட்டது. அந்த காட்சியை கண்ட நொடி என் மனம் அடைந்த உணர்வை எழுத்தில் சொல்லவே முடியாது. அவன் வாய்க்கு ஸ்டேப்ளர் போட்டா உனக்கு வலிக்குமா என்கிறேன் ,சார்வி ஆமாம் என்று கலங்கிய கண்ணும், சிரித்த முகமுமாய் சொல்கிறாள். அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, பின், எனக்கு முத்தம் ,எனக்கு முத்தம் என்று ஓடி வந்த எல்லா பிள்ளைகளுக்கும் முத்தம் தந்து.... வாழ்க்கை மிக அழகானது.

ஒரு பெண் நேசிக்கத்தொடங்கிவிட்டால் அதன் எல்லை அளவிட முடியாதது. பேரலையென அடித்துச் சுருட்டி தன்னுள் புதைத்துக்கொள்ளும் மூர்க்கமும் அதுவே, பொத்தி அணைத்து அடைகாக்கும் கதகதப்பும் அதுவே. மேற்சொன்ன நிகழ்வுகளை குரு, சார்வியின் குழந்தை மனம் மறந்து போகும். ஆனால் எனக்கு, கடவுள் தோன்றி மறைந்த கணமென இக்காட்சி நினைவில் ஒளி கூட்டும்.

*****
இன்று அம்மாவின் புடவையை உடுத்தியிருந்தேன். இதுவே முதல் முறை. இந்தப்புடவை அம்மாவுக்கு நான் எடுத்துக்கொடுத்தது தான். சின்னபிள்ளைங்க கட்டுற மாதிரி இருக்கு என்று சொல்லி ஒரு முறை மட்டுமே என் திருப்திக்காக கட்டியிருந்துவிட்டு பின் அதை பீரோவில் மடித்து வைத்தது தான்.

சின்ன வயசில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நானும்,தங்கையும் அம்மாவின் புடவையைக் கட்டிப்பார்த்து பெரியமனுஷி ஆகிவிட முயன்று கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அம்மாவின் புடவை அத்தனை சந்தோசத்தைக் கொடுத்தது. இனம் புரியாத ஒரு கவர்ச்சி அந்தப் புடவைக்கு உண்டு.

இன்று நான் உடுத்தியிருந்த அம்மாவின் புடவை பெரும் பாராங்கல் போல் என்னை நசுக்கிக்கொண்டு இருந்தது. இதோ பள்ளியிலிருந்து வந்து அவசரமாக வேறு உடைக்கு மாறும் வரை மூச்சு திணறிப் போயிற்று. இதோ இதை எழுதி முடிக்கையில் நான் இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பேன்.

என் நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மா விதவிதமாக புடவை உடுத்தியோ , ஆசை ஆசையாக தன்னை அலங்கரித்துக்கொண்டோ நான் பார்த்ததில்லை. எளிய புடவை, இரண்டே கண்ணி பூ என்பதே அவரின் அதிகபட்ச அலங்காரம். பொட்டு மட்டும் ஸ்டிக்கர் பொட்டுக்கு பதிலாக குங்குமத்தை நெற்றியில் வைத்திருப்பார். குங்குமம் லேசாக மூக்கின் மேல் சிந்தியிருக்கும். தலை நிறைய பூவும், கண்களில் எழுதிய மையும், கையில் வாட்ச்சுமாக தனது திருமணப் போட்டோவில் அம்மா எவ்வளவு அழகாக இருந்தார்?!

அம்மாவை கலர் புடவையில் பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்பா இறந்த அன்று பிறந்த வீட்டிலிருந்து அவருக்கு தரப்பட்ட வெள்ளைப் புடவையை உடுத்திக்கொண்டு இறுதியாக அப்பாவின் தலைமாட்டில் வந்து அமர்ந்து அழுதார். அதற்குப்பின் என்றுமே அம்மாவை வண்ணங்களுடன் நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், கெஞ்சிப் பார்த்தும் கலர் புடவைக் கட்ட மறுத்துவிட்டார். தயவு செஞ்சு என்ன கட்டாயப்படுத்தாதீங்க என்று சொல்லி ,தோடு முதற்கொண்டு அத்தனையும் இழந்து ,வெள்ளை உடைக்கு மாறி விட்டார்.

இப்போதெல்லாம் கணவனை இழந்தவர்கள் வெள்ளை ஆடை உடுத்துவது குறைந்து வருகிறது என்றாலும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இவை அத்தனை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. வண்ண உடைகளை துறக்க மறுப்பவர்கள் கணவன் மேல் அன்பற்றவர்கள் என்றும், பேராசை பிடித்தவர்களாகவும், கணவனின் மரணத்திற்கு கவலைப் படாதவர்கள் என்றுமே பார்க்கப்படுகிறார்கள்.ஒரு மெல்லிய சந்தேகம் அவர்கள் தலைக்கு மேல் எப்போதும் வட்டமிட்டபடி இருக்கிறது.

போதாதக் குறைக்கு இவள் கலர் புடவைக் கட்டினால் அது இவள் கூடப் பிறந்தவனுக்கு ( அண்ணன், தம்பி என்று ஆண்களுக்கு மட்டும்) ஆகாதென்று வேறு நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். என் மாமனார் இறந்தபோது என் மாமியார், எனக்கிருக்கறது ஒத்த பொறந்தவன். அவன் நல்லா இருக்கறதவிட எனக்கு கலர் புடவை முக்கியமா என்று சொல்லி இறப்புக்கு வந்திருந்த சொந்தக்காரர்களிடமே அத்தனைப் புடவையையும் ஆளுக்கு ரெண்டாகப் பிரித்துக் கொடுத்தது நினைவில் வருகிறது. ஆக வெள்ளைப் புடவை வேண்டாம் என்றால், கூடப்பிறந்தவர்கள் மேலும் பாசமற்ற ,சுயநலக் காரியாக அவள் அறியப்படுவாள்.

பூமியின் நில அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மாறி வருவதைப்போல , பெண்ணின் முன்னேற்றம், நகர்வு மிக மிக மெதுவா நடந்துகொண்டிருக்கிறது. இது மிகுந்த அலுப்பைத்தருகிறது என்றாலும் நம்பிக்கையோடு தலைமுறைகளைத் தாண்டி வந்துகொண்டிருக்கிறோம். பின்னோக்கி இழுக்கும் எத்தனையோ பூட்டப்பட்ட விலங்குகளை சுமந்துகொண்டு தான் பெண் இத்தனை மலர்ச்சியோடு , தாய்மை குன்றாது வலம்வருகிறாள்.

******