Tuesday, September 1, 2015

* தோகை மயில் *

முத்தங்கள் சொரியும் 
அடர் மேகம்
நான்

உறங்கும் பிள்ளையின் தலை கோதி
வழங்கும் முத்தம்
மழைநீரின் நிறம் 

நெடுநாள் பிரிவில்
ப்ரிய நண்பனை அணைத்துத் தரும் முத்தம்
மாலை வெயிலின் நிறம்

சிற்பத்தில் மனம் லயித்து
சிற்பியின் காய்ப்பேறிய கைகளில்
முகம் புதைத்துத் தரும் முத்தம்
புரளும் காட்டாறின் நிறம்

காதலனை
மடிசாய்த்து
புருவம் நீவி
நாசி நுனியில் கோர்க்கும் முத்தம்
முன்னிரவுக் கடலின் நிறம் 

இதழ் மென்று
நா தின்று
சுவாசம் உண்ணும் நீள் முத்தம்
அலையாடும்
அடர் பாசி நிறம் 

வர்ணங்கள் சிந்தித் தெறிக்கும்
முத்த மழை நான் 

நிறக்குருட்டு நிலத்தின் மேல்
தினமும்
பெய்து மரிக்கும்
மாரியும்
நான் 

***
நன்றி :திணை இதழ் .

No comments:

Post a Comment