Thursday, April 9, 2015




அவள் பெயர் அம்மு

இந்த நகர வாழ்க்கை விசித்திரமானது. தாமரை இலைத் தண்ணீர் போல யாருடனும் யாருக்கும் ஒட்டுதல் இல்லை. என் பக்கத்துக்கு வீட்டு மனிதர்கள் எனக்கு அறிமுகம் அற்றவர்கள். என் வீட்டு நிகழ்வுகள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. ஒரு வீட்டுக்குள் அலறும் சத்தம் கேட்டாலும் அவரவர் ஜன்னல் வழியாக கவலையுடன் பார்ப்பார்களேயன்றி என்ன ஆச்சு என்று வந்து கதவைத் தட்டமாட்டார்கள். ஆனால் எல்லோர்க்கும் நல்ல நண்பர்கள் உண்டு .ஆபத்தில் ஓடிவர ஆட்கள் உண்டு. ஆனால் அவர்கள் பக்கத்துக்கு, எதிர்வீட்டு ஆட்கள் அல்ல.

எங்கள் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீடு வாடகைக் குடியிருப்புகள் நிறைந்த அடுக்குமாடி. வருவோர் போவோர் அறிமுகமற்றவர்கள். எங்கள் வீட்டு யுடிலிட்டி ஏரியா அதாவது பாத்திரம் கழுவும், வாஷிங் மெஷின் இருக்கும் பின்கட்டு பகுதியிலிருந்து பார்த்தால் பக்கத்துக்கு வீட்டு பின்கட்டு தெரியும். அன்றொரு நாள் ஒரு நல்ல சிவந்த நிறம் கொண்ட வடிவான பெண்பிள்ளை ஒருத்தி அங்கு துணிகளை அலசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவளுக்கு 10, 11 வயது இருக்கும். நான் ஸ்ருதியிடம் வந்து சொன்னேன், பக்கத்து வீட்ல பார் உன்னவிட சின்ன பொண்ணு எப்படி வேல செய்யுது. செல்வா சொன்னார் அந்த பொண்ணு கையில குழந்தையோட வாசல்ல நிக்கறத பாத்தேன், அந்த வீட்ல வேலைசெய்யற பொண்ணு போல என்று. என்னால் நம்பவே முடியவில்லை அவளை அலங்கரித்தால் நிச்சயம் இளவரசி போல இருப்பாள். வேலைக்காரிக்கென்று ஒரு அடையாளத்தைப் பதிவு செய்து வைத்திருக்கும் மனம் எவ்வளவு மலினமானது ?!

மறுநாள் அவளை மீண்டும் பின்கட்டில் பார்த்தேன். புன்னகைத்து உன் பேர் என்ன என்றேன். அவள் மலையாளி. தமிழ் புரிந்தது அவளுக்கு. அம்மு என்று புன்னகைத்தாள். சஞ்சுவைப் பார்த்து யார் என்று கேட்டாள், பின் கையசைத்துவிட்டு உள்ளே போய்விட்டாள். அன்று மாலையே அவளைக் குழந்தையுடன் வாசலில் பார்க்கையில் புன்னகைத்துக் கையசைத்தேன். அவள் பதற்றமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் . அந்த ஒரே செய்கையில் அந்த வீட்டில் அவளது இருப்பு எப்படியானது என்று புரிந்துபோனது எனக்கு.

பிறகு எப்பொழுதும் பின்கட்டில் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசுவேன். அதற்குமேல் அவளுடன் என்ன பேசுவதென்று புரியவில்லை. ஒவ்வொரு முறையும் சொல்லிவைத்ததுபோல் ஒரு சில கேள்விகளையே அவள் திரும்பத் திரும்பக் கேட்பாள். சாப்டாச்சா ? பிள்ளைங்க என்ன பண்றாங்க ? இவைகள் தான் பெரும்பாலும். நீ சாப்டியா என்று கேட்பதில் பெரும் அச்சம் இருந்தது எனக்கு. பசங்க படிக்கறாங்க, டிவி பாக்கறாங்க , விளையாடுறாங்க என்று எந்தபதிலைச் சொல்லவும் நான் தயங்கினேன். எந்த பதிலும் அவள் குழந்தைப் பருவத்தின் மீது ஏவும் வன்முறையாக ஆகிவிடுமோ என்று பயந்தேன். எப்பவும், உள்ள இருக்காங்க என்ற பதிலைத் தவிர வேறு சொன்னதில்லை நான். அந்த இரும்பு கிரில் வழியாக அவளுக்கு என்னால் கொடுக்கமுடிந்ததெல்லாம் வெறும் சாக்லேட்டுகள் தான். பெரிய வெளிநாட்டு சாக்லேட்டை முன்பக்கம் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு அவள் தின்று முடிக்கும் வரை எனக்கு பதற்றமாக இருக்கும். அவள் துணி துவைக்க வருகையில் பின் கதவைப் பூட்டிவிடுவார்கள். அவள் துவைத்து முடித்துவிட்டு கதவைத் தட்டிவிட்டு காத்துக்கொண்டு நிற்பாள். கதவைப் பூட்டிவிட்டு உள்ளே என்னதான் செய்வார்கள் ? ஏதாவது
தின்றுகொண்டிருப்பார்களா ? இல்லை புணர்ந்துகொண்டிருப்பார்களா? அவள் கதவு திறக்கும்வரை கையில் பக்கெட்டோடு நின்றுகொண்டே இருப்பாள்.

அன்று அவள் குளித்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள் குளியலறை இருக்கையில் அவளை பின்கட்டில் குளிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் வழக்கம்போல அந்தபக்கம் பாத்திரங்களை எடுக்கச் சென்றேன். அவள் கீழே பாவாடை மட்டும் கட்டியிருந்தாள். மேல் சட்டை இல்லை. என்னைப் பார்த்ததும் சட்டென்று கைகளை நெஞ்சுக்கு குறுக்கே மறைத்தபடி அப்படியே குறுகி அமர்ந்துவிட்டாள். நான் நெருப்பை மிதித்தது போன்று துடித்துப் போனேன். அவளை நான் குழந்தையாகத் தான் எண்ணியிருந்தேன். இல்லையென்றால் ஒரு நொடி கூட நான் அங்கு நின்றிருக்கமாட்டேன். பெரும் குற்ற உணர்ச்சியோடு சாரி சொல்லி வீட்டுக்குள் வந்தேன். பின் ஒருபோதும் அவள் குளிக்கையில் நான் வேலை இருப்பினும் பின்கட்டுப்பக்கம் போவதில்லை. அந்தச் சின்னஞ்சிறுமியின் உலகம் அந்த பின்கட்டு மட்டுமே. அதில் ஒரு சிறு சஞ்சலத்தை உண்டாக்கவும் நமக்கு உரிமை இல்லை.


                                                            ******************

1 comment: