Thursday, July 17, 2014



இரக்கமின்றி பொழிகிறது
இந்த மழை

முரட்டுக்கோபக்காரனைப்போல
சீறிக்கொண்டுவரும்
வெயிலை
நெஞ்சோடு அணைத்துக்கொள்வதில்
யாதொரு அச்சமும் இல்லை

காதோரம் கிசுகிசுத்து
கள்ளப்புன்னகையில் கிறங்கச்செய்து
உயிரைத்தின்று உருக்குலைக்கும்
மழையை
அஞ்சி ஒடுங்குகிறேன்

உன் ஈரத்தைப்
பொறுக்கிக்கொண்டு
வெளியேறு

வாள் ஏந்தி வருவான்
ஓர் தணல்வீரன்

எரிந்து தழைக்கட்டும்
என் உப்பு மேனி
 

****

Tuesday, July 15, 2014



ஆதிவாசியின் சமிஞ்சையென 
என் குரல்
வனமெங்கும் ஒலிக்கிறது
வெகு தொலைவிலிருந்து 
திரும்பும் பதில் குரல்
கொஞ்சம் 
ஆசுவசிக்கச்செய்கிறது.

****

நிலமெங்கும் ஊறும் ஈரம்




இம்மழைக்காலம்
மேலும் பிணிசேர்க்கிறது

நிலமெங்கும் ஊறும் ஈரம்

கால்களை வயிற்றில் குறுக்கி
சுருண்டிருக்கிறேன்

சர்ப்பங்கள் இரண்டு
பாதங்களில் குடைந்து ஏறி
இடையில் ஓங்கி கொத்திவிட்டு
வயிற்றில் சுருண்டு முறுக்குகின்றன

போர்வைக்குள் சுழலும் வெப்பத்தில்
அம்மாவின் மடிச்சூடு
கொஞ்சமும் இல்லை

மற்றுமொரு திங்கள் என்று
நகரும் காலத்திடம்
எங்கனம் சொல்வேன்

சும்மாவேணும் கொஞ்சம்
அருகில் அமர்ந்திரு என்று.


*****

Thursday, July 3, 2014




சமையலறை எத்தனிப்புகள் ஏதுமற்று
இவ்அதிகாலையில்
படுக்கையில் குப்புற கவிழ்ந்து
கவிதை வாசித்துக்கொண்டிருக்கும்
நைட்டிப்பெண்ணை
அங்கலாய்த்தபடி நகர்கிறது கடிகாரம்
முதுகேறி வருகிறது வெயில்

****