Tuesday, March 18, 2014

அவ்வளவே




சிறை சிக்கியவனின் முகத்தில் சிறுநீர் கழிப்பதுபோல 
இயலாமையைச் சீண்டி விளையாடுகிறது இப்பெருவாழ்வு

நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்
தலைமயிர் சிரைக்கப்பட்ட பெண்ணின்
கூக்குரலாய் ஒலிக்கிறது

இரவே
என் சதை கிழிந்து உதிரம் கொட்டும் வரை
உன் சாட்டை சுழற்று
பின் ஓய்ந்து உறங்கிப்போ


*******



Thursday, March 13, 2014

காலங்களைக் கடந்து வருபவன்


பருவங்களை மலர்த்துபவன் 
காலங்களைக் கடந்து வருகிறான் 

வேர் அறியா நிலம்ஒன்றில் 
வெடித்து நிற்கிறது 
படகு 

பாசி படர்ந்த அவன் பாதங்களில் 
தலைப்பிரட்டையின் துள்ளலுடன் 
முயங்கத்தொடங்குகிறேன் 

அவன் புன்னகையின்
சாரலில் 
அசைந்து நெகிழ்கிறது படகு 

குமிழிகளென உருளும் கூழாங்கற்களில் 
ஆணிவேரின் பச்சைவாசனை 

நீர்ச்சுழிகளை ஸ்தம்பிக்கச்செய்யும்
அவன் 
மேல் நோக்கிச் செலுத்துகிறான்
நதிகளை

உருகத்தொடங்கும் 
பனிமலையின் உச்சியில் 
செங்கரும்புக்கொடியினை 
நாட்டிச்செல்பவன்
காலங்களைக் கடந்து வருகிறான் 
 
*****
செ.சுஜாதா.
நன்றி :உயிர் எழுத்து இதழ்.

Tuesday, March 11, 2014

சூட்சுமத்தின் ஸ்பரிசம்



இன்றும் 
அதே தனிமை 

மேல்மாடிக்கண்ணாடி வழியே 
இறங்கும் 
வெயில் 
இவ்வீட்டை இன்னும் 
பெரிது படுத்திக் காட்டுகிறது 

புத்தக அலமாரியில் 
எட்டுக்கால்பூச்சி 
அசைவற்று.

துருவப்பிரதேசத்தின் குளிர் 
மயிர்க்கால்களை 
துளையிடத்தொடங்குகிறது 

புகுந்து கொள்கிறேன் 
வழக்கமாக அணியும் கருப்பு கோட் தான் 

கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது 
அதன் நிறம் 

***
செ.சுஜாதா.

நன்றி: சொல்வனம்.காம்  [100 வது இதழ்]