Thursday, February 13, 2014

அக்காள்

அவள் என் அக்கா. சித்தப்பா மகள் என்றபோதும் அவள் என் அக்கா தான். சித்தப்பா வீடும் எங்கள் வீடும் அடுத்தடுத்த வீடுகள் ஆகையால் ஒன்றாக வளர்ந்தோம் என்று சொல்லலாம். எனக்கு ஒரு அண்ணனும் ,அக்காவுக்கு ஒரு தங்கை,ஒரு தம்பியும் உண்டு. அக்காவை என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். கிட்டத்தட்ட எல்லோருக்கும்.

அவள் ரொம்ப பொறுப்பானவள். திருவிழாவுக்கோ, வேறு விசேசங்களுக்கோ உறவினர் வீட்டுக்கு நாங்கள் செல்கையில் கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நானும்,என் தங்கையும் மாட்டு வண்டியிலோ, ட்ராக்டர் வண்டியிலோ இல்லை புளியமரத்தடியிலோ அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கையில் அவள் மட்டும் தேங்காய் துருவிக்கொண்டோ, குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டோ அலைந்து கொண்டிருப்பாள். உறவினர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டு,அரட்டை அடித்துக்கொண்டு அவர்களோடு வேலை செய்யும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும். பெரியத்தனமாக நடப்பதாக கூறி அவளை எங்களுடன் நாங்கள் சேர்க்கமாட்டோம்.

அதே போல் ரொம்ப சுத்தக்காரி. தினம் உடுத்தும் உடைகளை அன்றன்றைக்கு அயர்ன் செய்து தான் உடுத்துவாள். துணி துவைக்க ஆள் இருந்தாலும் அவள் துணிகளை அவளே தான் துவைத்துக்கொள்வாள். தரையில் உரசி அழுக்காகி இருக்கும் பாவாடை நுனியை பார்த்து பார்த்து தேய்த்து அலசுவாள்.

அடிக்கடி எங்களை திட்டிக்கொண்டே இருப்பாள். ஆனால் எங்கள் மேல் அக்கறையாக இருப்பாள். என் தங்கை அவளை மதிக்கமாட்டாள்.அக்கா என்று கூப்பிடவும் மாட்டாள். நான் அக்கா மேல் மரியாதை கொண்டிருந்தேன். அவளிடம் கொஞ்சம் பயம் வைத்திருந்தேன். அக்கா திருச்சியில் கல்லூரி முதல் வருடம் படிக்கையில் நான் அதே ஊரில் வேறு ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன். அவள் எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவாள். நல்லா படி, பொறுப்பா இரு, பெரியப்பா உன்னை கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறாங்க என்று முழுக்க முழுக்க அறிவுரைகள் தான் இருக்கும். எங்கள் ஐவரில் அவள் தான் நன்றாக படிப்பவள்.

அடுத்தவருடம்  நான் அக்கா படித்த அதே கல்லூரிக்கு வந்து சேர்ந்ததும் அவள் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் என்னை கொண்டுவந்தாள். என் செலவுக்கான பணத்தை அப்பா அவளிடம் தான் தருவார். தேவைப்படும்போது காரணத்தை சொல்லி அவளிடம் காசு வாங்கிக்கொள்ள வேண்டும். பணத்தை அவளிடம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். 

அடிக்கடி என் ரூமுக்கு வந்து என் பெட்டி, அலமாரி எல்லாவற்றையும் திறந்து பார்த்துவிட்டு ஒரு ரவுண்டு திட்டி முடித்துவிட்டு எல்லாவற்றையும் நீட்டாக அடுக்கி தந்துவிட்டு போவாள். துணி துவைக்க போனால் அங்கும் இருப்பாள். ஏன் இத்தனை துணி சேர்த்திருக்க? அன்றன்றைக்கு துவைக்கலாம்ல என்று ஒரு சுற்று வசை விழும். நான் எதிர்த்தே பேசமாட்டேன். வெளியில் இருந்து ஏதாவது தின்பண்டம் வாங்கினால் மறக்காமல் என்னை அழைத்து தருவாள். 

புடவை, நகைகளில் மிகுந்த விருப்பம் உள்ளவள். திருமணத்திற்கு பிறகு ஒருமுறை அவள் வீட்டிற்கு சென்றபோது ஒரு பீரோ நிறைய தினம் உடுத்தும் புடவைகள்,அதற்கு மேட்ச்சான ரவிக்கை,உள் பாவாடை என வரிசையாக ஒழுங்கு குலையாமல் அடுக்கி இருந்தாள். மற்றொரு பீரோ, வெளியில் போனால் உடுத்தும் புடவைக்காம். தோடுகள் கிட்டத்தட்ட ஒரு 20,25 செட் இருக்கும். பெரிய பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். மாமாவை ஆண்டி ஆக்கிவிடாதே என்று நான்கூட கிண்டல் பண்ணினேன். இப்பவும் எங்காவது என்னை சந்திக்கையில் முதலில் புடவையை தான் விசாரிப்பாள் எங்க வாங்கின, என்ன புடவை இது ?என்று .

நான் ஏன் இதை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ?! 

ஆறு மாதம் முன்பு என் தோழி ஒருத்தியின் அண்ணி விபத்தில் இறந்துபோனார். அவருக்கு 6 வது படிக்கும் பையனும் உண்டு. அண்ணன் இனி எப்படி மீதி வாழ்க்கையை வாழ்வாரோ என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தார். இதோ அவருக்கு நாளை மறு கல்யாணம். பையனை பார்த்துக்கொள்ள, அவரின் சுமைகளை தாங்கிக்கொள்ள என்று 6 மாதத்திற்குள் அலைந்து தேடி ஒரு பெண்ணை கண்டுவிட்டார்கள். ஏழை பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் எந்த ஆணுக்கும் துணை இன்றி வாழ அவசியம் நேர்வதில்லை. இந்த திருமணத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.ஏன் எனக்கும் கூட மிக்க மகிழ்ச்சியே. 

நான் ஏழு வருடம் பின்னோக்கி பார்க்கிறேன். என் பொறுப்பான, அன்பான, எல்லோருக்கும் பிடித்தமான என் அக்காவின் கணவர் ஒரு விபத்தில் இறந்தபோது அக்கா தன் இரண்டாவது பிள்ளையை இடுப்பில் சுமந்திருந்தாள். பெரியது மிட்டாய் தின்றுகொண்டு இழவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால் யாருமே அவளின் மறு மணத்தை பற்றி எண்ணிக்கூட பார்க்கவில்லை. மாறாக, தாலி ஒன்னு தான் கழட்டி இருக்கா, தோடு,வளையல் எல்லாம் போட்டுக்கிட்டு புருஷன் இல்லாதவ  மாதிரியே தெரியல என்று விமர்சிக்க தான் ஆள் இருந்தது. 

Bsc யோடு கல்யாணம் செய்துகொண்டவள் இந்த இழப்புக்கு பின் Msc B.Ed முடித்தாள். ரெஜிஸ்டர் பண்ணிருக்கேன் .விடோ கோட்டாவுல டீச்சர் வேலை கிடைக்கும் என்று அவள் சொன்ன போது சாட்டையை சொடுக்கியது போல மனம் துடித்தது. அவளுக்கு சம்பாதித்து தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சொந்தமாக பஸ், வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் என்று ஏராளம் உண்டு. ஆனாலும் ஏன் அவள் படித்து ,வேலைக்கு பதிந்துவிட்டு காத்திருக்கிறாள் ? 

உடலளவிலும்,மனதளவிலும் மிகுந்த திடம் கொண்டவர்கள் என்று எண்ணப்படும் ஆண்களால் துணை இல்லாமல் 6 மாதத்தை கூட கடக்க முடியாது எனும்போது பெண்ணால் மட்டும் அது முடியும் என்று நம்பும் இந்த சமூகம் என்று மாறும் ? பற்றுகோலாக பற்றிக்கொள்ள ஆண் பெண்ணையே நாடுகையில்,தனித்து விடப்பட்ட  பெண்ணுக்கு தன் இரு கால்களே போதுமானதாக இருக்கிறது . 

                               ********

No comments:

Post a Comment