Tuesday, December 30, 2014





எங்கள் ஊரில் ஒரு லைப்ரரி இருந்தது . பற்றாக்குறை வெளிச்சத்துடன் , மர பெஞ்சுகள் போடப்பட்டு , பழைய கட்டிடத்தில் இயங்கிவந்த அது, ஒரு புராதன லுக்கில்  இருக்கும்.போஸ்ட் ஆபீஸ் வுடன் இணைந்த கட்டிடம் அது .போஸ்ட் மாஸ்டர் தான் லைப்ரரிக்கும் பொறுப்பு . 
அண்ணனும் மாமாவும் அடிக்கடி அங்கு சென்று வாசித்துக்கொண்டிருப்பார்கள் .நாங்கள் தெருவில் திரிந்துகொண்டிருக்கும் வேளைகளில் லைப்ரரியை கடக்க நேர்கையில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்போம். போஸ்ட் மாஸ்டர் 'படிக்க வரீங்களா ?' என்று கேட்டால் இல்லை என்று தலையாட்டிவிட்டு ஓடிவிடுவோம் . டியூஷன் போவது போல, ஒருமுறை நுழைந்து மாட்டிக்கொண்டால் அப்புறம் தப்பமுடியாது என்பது போல அந்த லைப்ரரி அச்சம் தருவதாக இருந்தது .வாசிப்பு என்பது பாடப்புத்தகம் போலவே ஒரு சுமை என்று நாங்கள் நம்பியிருந்தோம். 

ஆறாம் வகுப்பு சென்றபின் அச்சம் குறைந்து ஆர்வம் பிறந்தது. அதுவும் வாசிப்பு ஆர்வம் அல்ல .  அங்கே நுழைவது ஒரு சாகசம் என்பது போல. நானும் தோழன் ,தோழிகளும் கூட்டமாக லைப்ரரிக்குள் நுழைந்தோம் . அந்த புழுக்க வாசனை ,கைவிடப்பட்டது போன்ற அதன் தோற்றம் பதற்றம் தொற்றிக்கொண்டது . அங்கிருந்த நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பின் புத்தகங்களை எடுத்து படிக்கலாம் என்றார் போஸ்ட் மாஸ்டர். நோட்டின் அருகே ஒரு நீளமான  பென்சில் அரைஞான் கயிறு போன்ற ஒரு கயிற்றில் பிணைத்து கட்டப்பட்டு இருந்தது. அவரவர் பெயர்களை வரிசையாக எழுதினோம் . ஒரே நாளில் பெரிய மனிதர்கள் ஆகிவிட்டதன் அறிகுறி அனைவர் முகங்களிலும். கைக்கு கிடைத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வரிசையாக பெஞ்சுகளில் அமர்ந்து வாசிக்கத்தொடங்கினோம்.

அவ்வளவு தான் சாகச த்ரில் எல்லாம் அத்தோடு வடிந்துவிட்டது. இப்போது, இந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது என்ற கவலை பற்றிக்கொண்டது. ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறோம் ஜனங்கள் நடந்துகொண்டும் ,சைக்கிளிலும் தெருவில் சுதந்திரமாக இருக்கின்றனர் .நாங்கள் நன்றாக மாட்டிக்கொண்டோம் . உடனே வெளியே போனால் போஸ்ட் மாஸ்டர் திட்டுவாரோ ? இங்கே வந்திருக்கவே கூடாது .எல்லோரும் பலியாடுபோல புத்தகங்களோடு அமர்ந்திருந்தோம் . போஸ்ட் மாஸ்டர் உள்ளறைக்குள் போனார் . முதல் ஆள் புத்தகத்தை வைத்துவிட்டு ஓட்டம் எடுத்ததும் நாங்கள் அனைவரும் பின்தொடர்ந்து தெறித்து ஓடினோம். காற்று எவ்வளவு சில்லென்று முகத்தில் மோதுகிறது ! அநேகமாக காற்றும் எங்களுடன் கூட ஓடிவந்திருக்கும் என்று நினைக்கிறேன் .அதன் பிறகு எங்கள் கையெழுத்து அங்கு பதிவாகவே இல்லை .

என் வாழ்வில் வெகு தாமதமாகவே லைப்ரரிக்குள்  மீண்டும் நுழைந்தேன் .அதுவும் தோழி வீட்டில் இருந்த சிறிய லைப்ரரி. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்துக் கடந்துகொண்டிருந்த நாட்கள் கொஞ்சம் வேகமெடுத்தது அங்குதான். 

என் பிள்ளைகள் சீக்கிரமே வாசிக்கத்தொடங்கி விட்டனர். இப்பெருநகரில் அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் ஏராளம் கொட்டிக்கிடக்கின்றன. பள்ளிகளும் லைப்ரரிக்கென்று ஒரு பீரியட் ஒதுக்கி வாசிப்பைப் பழக்குகின்றனர் . ஆனாலும் எங்கள் ஏரியாவில் நான் லைப்ரரியை கண்டதில்லை .மூன்று நாட்களுக்கு முன் சஞ்சு ஒரு லைப்ரரியை கண்டுகொண்டாள். தினம் கடக்கும் சாலையில் மாடியில் சிறிய அறையில் இருந்த பிரைவேட் லெண்டிங்  லைப்ரரியை நான் கவனித்திருக்கவே இல்லை . மூன்று நாளாக இதே நினைப்பாக கிடந்து இன்று மெம்பராக இணைந்துவிட்டாள். அங்கேயே அமர்ந்து படிக்க வசதி இல்லை என்பதொன்றே குறை அவளுக்கு . 

தெருவுக்கு தெரு பீட்சா ,பர்கர் , பானிபூரி கடைகளும் பப்களும் நிறைந்த இந்த நகரில், ஒரு ஆள் மட்டுமே ஏறிச் செல்லக்கூடிய படிக்கட்டுகளுடன் சிறிய அறையில் பொக்கிஷம் போல இலக்கியங்கள் காத்திருக்கின்றன . லைப்ரரி  நடத்துபவரிடமும் இதைச்சொன்னேன். மனதாரப் பாராட்டினேன். முகம் மலர்ந்த அவர் புன்னகையில் ஒளி கசிந்தது .

                                                    ********************


ஒரு தீக்குச்சியை உரசி
நகர்ந்து கொண்டிருக்கும்
புழுவின் உடலில் தடவுதல்
ஒரு குண்டூசியின் முனையை
நத்தையின் பாதங்களில் செலுத்துதல்
ஒரு பிளேடைக் கொண்டு
எறும்பின் புட்டத்தை அகற்றுதல்
இரண்டே விரல் கொண்டு
பட்டாம்பூச்சியின் சிறகைப் பறித்தல்
ஒற்றைச் சொல் கொண்டு
மூச்சுக்குழலை முடிச்சிடுதல்

****

Wednesday, September 24, 2014

பூனைக்குட்டி





அப்போது நான் பள்ளிச்சிறுமி . தட்டானைப்போல தெருவெங்கும் சுத்திக்கொண்டிருப்பவள். முகமறியா மனிதர்கள் என்று யாரும் அங்கிருப்பதில்லை. அத்தனையும் தெரிந்தமுகங்கள். அனைவரும் என் அப்பனை, பாட்டனை, பூட்டனை தெரிந்தவர்கள். தலைமுறைகள் தாண்டி அந்த கிராமமெனும் தோணியில் ஒன்றாகப் பயணிப்பவர்கள்.
அங்கு குழந்தைகள் அச்சமற்று இருந்தோம். பெற்றோர்கள் பிள்ளைகளை ஊர் எல்லைவரை அனுமதித்திருந்தனர் .

அண்ணன், வீட்டில் அமைதியாகப் படித்துக்கொண்டிருக்க, நான் விளக்கு வைக்கும் வரை ஊர்சுற்றிவிட்டு முழங்கால் வரை தெருப்புளுதியை வாரிக்கொண்டு வீடுவந்து சேருவேன். அம்மா வாய்நிறைய வசையுடன் அடிக்கவருகையில் ஒரே ஓட்டமாக படிகளில் தாண்டிக்குதித்து அருகில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு ஓடிவிடுவேன். அப்பா வீட்டுக்கு வந்ததும் ஆள் அனுப்பி அழைத்துவருவார்கள். அப்பா முன்னால் என்னை யாரும் தொட்டுவிட முடியாது . அதனால் அம்மா கொஞ்சநேரம் குற்றப்பத்திரிக்கை வாசித்துவிட்டு சரி சாப்பிட வா என்பாள்.

அன்றும் நான் என் பட்டாளத்துடன் விளையாடப்போனேன். ஒருத்தி சொன்னாள் உடைந்து கிட்டத்தட்ட குட்டிச்சுவராக நிற்கும் அந்த வீட்டின் கூரை இடுக்கில் பூனை குட்டிபோட்டிருக்கிறது என்று. எங்கள் எல்லோருக்கும் ஆசை அதை பார்க்கவேண்டும் என்று. பூனைக் கடித்துவிடுமோ என்று பயம்வேறு. கொஞ்சம் தள்ளி இருந்த சுவர்மேல் ஏறி ஒவ்வொருவராக பார்க்கமுடிவு செய்தோம். மூணுகுட்டி இருக்கு, குட்டி தூங்குது, வெள்ளையா இருக்கு, பூனை பாக்குது சத்தம்போடாத என்று ஒவ்வொருவராக ஏறிப்பார்த்து சொல்லிக்கொண்டிருக்க ,என் முறைக்காக நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

இப்போது என்முறை. ஆவலும், பயமும் மிக அந்த செந்நிற மண்சுவற்றைப்பற்றி மெல்ல ஏறினேன். பூனைக்குட்டிகள் முண்டிக்கொண்டிருந்தன. தாய் வெறுமனே என்னைப்பார்த்துக்கொண்டிருந்தது. சிலநிமிடங்கள் தான், தொம் என்ற சத்தத்துடன் நான் கீழ்நோக்கி சரிந்துகொண்டிருந்தேன். மண்சுவர் உடைந்து ,கட்டி மண் குவியலும் நானுமாக மொத்தமாகக்குவிந்திருந்தோம்.

நான் கை, கால் எல்லாம் சிராய்ப்பில் ரத்தம் ஒழுக நொண்டிக்கொண்டே அங்கிருந்து எல்லோருடனும் வெளியேறினேன். எதிரே என் அத்தை வீடு அப்போது தான் அஸ்திவாரம் எழுப்பப்பட்ட நிலையில் இருந்தது அங்கு போய் மறைவாக உட்கார்ந்துகொண்டு என் காயங்களை எல்லாம் கவலையோடு ஆராய்ந்தோம். எனக்கு வலியைக் காட்டிலும் அம்மாவுக்கு தெரிந்தால் அடி விழுமே என்ற கவலைதான் அதிகம் இருந்தது. அம்மாவிடம் சொல்லாமல் மறைப்பது என்று ஒருமனதாக முடிவானது. வலி முகத்தில் தெரிகிறது , நடையில் தெரிகிறது. அத்தனையும் வீட்டுவாசலில் நுழைகையில் மறைத்திருந்தேன்.

வீட்டில் பாத் ரூமுக்குப் போய் கைகால்களில் காயத்தில் ஒட்டியிருந்த மண்ணையெல்லாம் கழுவிவிட்டு நேராகச்சென்று படுத்துவிட்டேன். அம்மா சாப்பிடக்கூப்பிட்டாள். அத்தை வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொல்லி கண்களை மூடிக்கொண்டேன்.

எத்தனை யோசித்தும் அந்த காயம் எப்போது ஆறியது, மறுநாள் என்னசெய்தேன் என்று ஞாபகமே வரவில்லை. இத்தனை வருடம் கழித்து இப்போது தான் கொஞ்சநாளுக்கு முன் அம்மாவிடம் இதை சொன்னேன்.

மறைக்கப்படும் காயங்களுக்கு மருந்து இடப்படுவதில்லை. மௌனமே காயங்களை விசிறிக்கொண்டிருக்கின்றது. சில காயங்கள் எப்போது ஆறியதென்றறியாமல் மறைந்துபோகின்றன. சில காயங்கள் புரையோடி உயிரைத் தின்கின்றன. எப்படியாகினும் மறைக்கப்படும் காயங்கள் என்றும் மறப்பதற்கில்லை.

Thursday, July 17, 2014



இரக்கமின்றி பொழிகிறது
இந்த மழை

முரட்டுக்கோபக்காரனைப்போல
சீறிக்கொண்டுவரும்
வெயிலை
நெஞ்சோடு அணைத்துக்கொள்வதில்
யாதொரு அச்சமும் இல்லை

காதோரம் கிசுகிசுத்து
கள்ளப்புன்னகையில் கிறங்கச்செய்து
உயிரைத்தின்று உருக்குலைக்கும்
மழையை
அஞ்சி ஒடுங்குகிறேன்

உன் ஈரத்தைப்
பொறுக்கிக்கொண்டு
வெளியேறு

வாள் ஏந்தி வருவான்
ஓர் தணல்வீரன்

எரிந்து தழைக்கட்டும்
என் உப்பு மேனி
 

****

Tuesday, July 15, 2014



ஆதிவாசியின் சமிஞ்சையென 
என் குரல்
வனமெங்கும் ஒலிக்கிறது
வெகு தொலைவிலிருந்து 
திரும்பும் பதில் குரல்
கொஞ்சம் 
ஆசுவசிக்கச்செய்கிறது.

****

நிலமெங்கும் ஊறும் ஈரம்




இம்மழைக்காலம்
மேலும் பிணிசேர்க்கிறது

நிலமெங்கும் ஊறும் ஈரம்

கால்களை வயிற்றில் குறுக்கி
சுருண்டிருக்கிறேன்

சர்ப்பங்கள் இரண்டு
பாதங்களில் குடைந்து ஏறி
இடையில் ஓங்கி கொத்திவிட்டு
வயிற்றில் சுருண்டு முறுக்குகின்றன

போர்வைக்குள் சுழலும் வெப்பத்தில்
அம்மாவின் மடிச்சூடு
கொஞ்சமும் இல்லை

மற்றுமொரு திங்கள் என்று
நகரும் காலத்திடம்
எங்கனம் சொல்வேன்

சும்மாவேணும் கொஞ்சம்
அருகில் அமர்ந்திரு என்று.


*****

Thursday, July 3, 2014




சமையலறை எத்தனிப்புகள் ஏதுமற்று
இவ்அதிகாலையில்
படுக்கையில் குப்புற கவிழ்ந்து
கவிதை வாசித்துக்கொண்டிருக்கும்
நைட்டிப்பெண்ணை
அங்கலாய்த்தபடி நகர்கிறது கடிகாரம்
முதுகேறி வருகிறது வெயில்

****

Wednesday, June 25, 2014

அதுவே



அத்தனை அசிரத்தையுடன்
நீ விட்டெறிந்து கடக்கும்
எச்சில் சிகரெட்டின்
துளி கங்கு
இவ்வனத்தையே பற்றி எரியவிடுகிறது

நீ நடந்துகொண்டிருக்கிறாய்
சடசடத்து எரியும்
பச்சையத்தின் கருகல்நெடி
உன் நாசி எட்டும்
தொலைவைத்தாண்டி


****


Monday, June 23, 2014

நன்நீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி


தன் ஆதி வனத்தின் 
கடைசி மூங்கில் குருத்தை துழாவும் 
தளர்ந்த தும்பிக்கையின்
பசியாக இருந்திருக்கிறது
அது !

மலை உச்சியில் ஊறும் 
ஒற்றை கொம்புத்தேனின் ருசி தேடி 
வியர்க்க முன்னேறிக்கொண்டிருக்கிறேன் 

உச்சந்தலை மயிரை சுண்டி இழுக்கும் 
மலை தேனின் முதல் துளியை 
ஏந்தும் தருணம்

வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க 
கள் வெறி கொள்கிறேன் 

மகரந்தத்தில் சிக்குண்ட கருவண்டின் சிறகடிப்பாய் 
எனது உயிர்பறவை
நம்பவியலா படபடத்து 
வானம் நீங்கியது

***
நன்றி :யாவரும்.காம்.

இந்த வெயிலுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை.





 மஞ்சள் வெயில் ஒரு தலைக் காதல் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு நகரமுடியாத நாவல். அது கதிரவன் என்ற ஒருவனின் கை அளவு காதல் அல்ல. அது ஒரு கடல்ஒரு வானம். இப்பிரபஞ்சம் முழுவதையும் நிறைத்துக்கொண்டு பாடும் பாடல். காணும் உயிரை எல்லாம் வாரிச்சுருட்டித் தன்னுள் கரைத்துவிடும் சுழல்.

கதிரவன் அதிகம் பேசாதவன். தனிமையின் மௌனத்திற்குள் தன்னைச் சுருட்டிக்கொள்பவன். இலக்குகள் அற்றவன். வாழ்வை அதன் போக்கில் நகர அனுமதித்திருப்பவன். இப்படியானவர்கள் பற்றுகொடி அற்று தள்ளாடிக்கொண்டிருப்பவர்கள். கலைஞன் சின்னதொரு பாராட்டுக்கு ஏங்கிக்கொண்டிருப்பவன். அவனுக்குத் தேவை பரிசுப்பொருள் அல்ல. ஒரு சொல்ஒரு கவனிப்புஒரு புருவம் உயர்த்தல்ஒரு கைதட்டல் அவ்வளவே. கதிரவனும் அப்படியே. அவனின் கலைக்கு கிடைக்கும் பாராட்டு அவனை சந்தோசம் கொள்ளச் செய்கிறது. 

ஆண் எப்போதும் தன்னைப் பெண்ணிடம் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாகவே இருக்கிறான். அவனுக்கு எப்போதும் ஒரு தாய் தேவையாய் இருக்கிறாள். அந்த தாயை அக்காவிடம், தங்கையிடம், தோழியிடம் என்று எங்காவது கண்டுவிடத் தவிக்கிறான். நான்கு நாள் நன்றாகப் பேசிவிட்ட ஒருபெண்ணைத் தனக்கானவள் என்று எண்ணிக்கொள்ளத் தோன்றுவதும் அதனால் தான். கதிரவனும் அப்படியே. முன் பின் அறிந்திடாத ஒரு பெண் தனது ஓவியங்கள், கவிதைகளை ரசிக்கிறாள் என்று கேள்விப்பட்ட கணம் முதல் தவிக்கத்தொடங்கிவிடுகிறான். தள்ளாடும் கொடிபோன்ற அவன் மனம் அந்தப் பெண்ணைப் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிடுகிறது.

ஜீவிதா என்ற அந்தப் பெண்ணை முதன் முதலில் சந்திக்கப்போகும் நாள், அப்பப்பா என்ன ஒரு தவிப்பு!! இரவெல்லாம் உண்ணாமல், உறங்காமல்,  நாளை ஜீவிதாவைக் காணப்போகும்போது போட்டுக்கொள்ள சட்டையைத் தேர்ந்தெடுத்து, அதை நள்ளிரவில் துவைத்து உலர்த்தி... ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ரகசியமாய் ஊடாடியபடியே இருக்கும் மின்னலையின் அதிர்வுகள் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாதவை .

இவ்வளவு முன்தயாரிப்புகளோடு அலுவலகம் சென்று, அவள் அவனைக் காண அறைக்கு வந்து, முதுகுக்குப் பின்னே காத்திருக்கிறாள் என்று உணர்ந்தும் திரும்பி அவளிடம் பேச துணிவற்றுத் தடுமாறும் நிமிடங்கள் அவ்வளவு அற்புதம்,  மிகத் தீர்க்கமாக. “அற்புதம்” என்ற சொல் இங்கு மிகை அல்ல .

கதிரவன் தனது மனதை ஜீவிதாவிடம் திறந்துகாட்டத் துணிவற்றவானாகவே இருக்கிறான். சின்னச் சின்ன வார்த்தைகள், மோதி நகரும் பார்வைகள், அவளைக் கால்கடுக்க காத்திருந்துக் காணும் நிமிடங்கள், பூக்காரி மூலம் அவன் தினம் தரும் பூக்கள் இவைகளே போதுமானதாக இருக்கிறது கதிரவனின் காதல் விதை வேர் பிடித்துக் கிளைபரப்ப.

ஆசை எனும் பச்சைக்கிளி கதிரவனின் மனச்சிறையில் கிடந்து ஓயாமல் கத்துகிறது, வேகம் கொண்டு மனக்கதவைக் கீறித்தவிக்கிறது, றெக்கைகளை அடித்து அடித்து ஓய்கிறது. தாளமுடியாத அவனது காதல் பாரத்தை மதுக்கடைகளும், கடல் அலைகளுமே தாங்கிக்கொள்கின்றன. 

நாடோடி உருதுப்பாடகன் 'கான் முகமது ' ஒரு கைவிடப்பட்டவன்.அல்லது இவ்வுலகை ஏதோ ஒரு தருணத்தில் கைவிட்டவன். அழுக்கன், கிறுக்கன். எப்போதும் தன்னை விட்டு நீங்காதிருக்கும் பெரிய சிம்னி விளக்கும், முகம் பார்க்கும் கண்ணாடியுமே அவன் துணை. மனதை உலுக்கும் பாடல்களில் தனது உலகை ஸ்ருஷ்டித்துக்கொண்டவன். அவனும் கதிரவனும் வேறு வேறா என்ன? பசித்த வயிற்றோடு தனது சிம்னி விளக்கை ஒரு தவம் போல அதீதக் கவனத்தோடு ஒரு மணிநேரமாகத் துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும் அவனே தான் கதிரவனும். தனது பசி, தூக்கம் அனைத்தும் மறந்து தனது காதலை ரசித்து ரசித்து வரைந்துகொண்டிருக்கிறான் கதிரவன். ஒரு கட்டத்தில் ஜீவிதா ஒரு புள்ளியாக மறைந்து, இப்பிரபஞ்சம் முழுதும் கதிரவனின் காதல் மட்டுமே ஒருஒளிக்கோளமாக மஞ்சள் வண்ணம் தளும்ப பொன்னாக ஜொலிக்கத்தொடங்குகிறது. 

தனது இறந்த மகள் நஜ்மாவைத் தேடி அலையும் சுலைமான் சேட், பச்சை வர்ணக் கதவை ஏதோ தாவரம் என்றெண்ணி மொய்க்கும் ஊசித்தட்டான்கள் என குறியீடுகள் இக்கதை நெடுகிலும் ஊடாடுகின்றன. எளிய மனிதர்கள் மேல் இந்நகரம் குப்பைகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அதனூடே வாழப்பழகிவிட்ட மனிதர்கள் அரிதாய் நல்லவைகளைப் பொறுக்கி எடுக்கின்றனர். உள்ளங்கைகளில் வரையப்பட்ட ஓவியமென அவைகளைப் பெற்றுக்கொண்டு குழந்தையாய் மகிழ்ந்து ஓடுகின்றனர்.

கதிரவனின் அறைக்குச் செல்லும் மரத்தாலான மாடிப்படி ஒருஅருமையான சித்தரிப்பு. ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் பிள்ளையைக் கடிந்தபடி  லேசாகத் தலையில் கொட்டி, அப்பாவுக்குத் தெரியாமல் பூனை நடை நடந்து உள்ளே அழைத்துச்சென்று சோறு போடும் தாயைப்போலக் கிசுகிசுக்கிறது சில வேளை. மகிழ் தருணங்களில் பிள்ளைகளோடு ஓடிப்பிடித்து விளையாடும் தாயாகி சப்திக்கிறது சிலவேளை. கதிரவனின் மனவோட்டத்துக்குத் தக்கபடி இசைகிறது அம்மரப்படி.

சப் எடிட்டர் சந்திரன், இரவுக்காவலாளி பாலகிருஷ்ணன், நண்பன் டேனியல் என்று கதிரவனைச் சுற்றி இருக்கும் அனைவரும் அவன் மேல் அன்பு செலுத்துபவர்களாக, நலம் விரும்பிகளாகவே இருக்கின்றனர். ஆனாலும் அவன் எப்போதும் தனிமையில் இருக்கிறான், துன்பத்தில் உழல்கிறான். காதல் அவன் நடுமனதில் சம்மணமிட்டு அமர்ந்து அவனைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. எப்போதும் தன் அறைக்கதவைத் திறந்தே வைக்கும் கதிரவன் தன் உள்ளத்தை மட்டும் இறுகப்பூட்டி வைக்கிறான்.

இறுதியில் காதல் நிராகரிக்கப்பட்டது என்று தெரிந்தபின்னும் தனது காதலை கைவிடாமல் சுமக்கிறான். தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்ட கணவனின் குழந்தையைக் கண்ணுக்குள் வைத்துக்காப்பாற்றும் தாயைப்போல ஜீவிதா எங்கோ இருக்க அவள் மேல் கொண்ட காதலைப் பேணிப்பாதுகாக்கிறான். கொண்டாடுகிறான்.

இந்தக் கதைக்கு மஞ்சள் வெயில் என்ற தலைப்பு தான் எத்துனைப் பொருத்தமானது?!!  
ஆம்.. அந்த வெயிலுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. கொஞ்சமும் சுணக்கம் இன்றி அதுஎல்லா உயிர்களிடத்தும் ஒன்றுபோலப் பொழிந்து பரவுகிறது. குப்பை மேட்டிலும், கோபுரக் கலசத்திலும் தனது மஞ்சள் நிற வெயிலை நீக்கமற நிறைத்துச்செல்கிறது. 
காதலும் அவ்வாறே ! 
கல் எறிபவனுக்கும், கரம் பற்றுகிறவனுக்கும் நேசத்தையே பரிசாகத்தருகிறது. 


குறிப்பு:

தளும்பிக்கொண்டிருக்கும் காதலை கணநேரமும் தனியே தவிக்கவிட முடியாது என்பது போல் யூமா வாசுகியின் “ மஞ்சள் வெயில் ” புத்தகத்தைச் சுமந்துகொண்டே அலைந்தேன். அதனோடு உண்டு, அதனோடு உறங்கி அக்காதல் பிரபஞ்சத்தை ஒரு முறை வலம்வந்து விட்டேன். எழுத்து நமக்குள் நடத்தும் மாயத்தை எத்தனை முறை கண்டாலும் அலுப்பதில்லை. நேசக்கரம் நோக்கி கயிரறுத்த கன்றுக்குட்டியாய் மனம் துள்ளிக்கொண்டு ஓடுவதை உணரும் தருணம் அற்புதம், அற்புதம், அற்புதம்.  
                       *****
செ.சுஜாதா.
நன்றி : மலைகள்.காம்    

Thursday, June 19, 2014

மருதாணிக் காடுகளின் உன்மத்தம்




ஆதிக்கனவுகளை 
திருத்தி எழுதிக்கொண்ட 
முனை மழுங்கிய பேனாக்கள் 
மைத்துடைக்கப்பணிக்கின்றன 
முந்தானைகளை 

கட்டிவைத்துப்புணரத்துடிக்கும் 
சாத்திரங்களை 
நான்காய் மடித்து 
தூமைத்துணிகளாக்கிக்கொண்ட நாளில் 
வலிகள் அற்றவர்களானோம் 

நாங்கள் 
துடுப்புகள் அற்று படகு செலுத்தும் 
கலை அறிந்தவர்கள் 

மேலும் 
உங்கள் செங்கோல் ஆட்சியின் 
கீழ் 
வராத குடிகள் நாங்கள் 


வவ்வால்களின் இரைச்சல்கள் அற்ற 
நீண்டு மிகுந்த  இரவுகளும் 
முதல் தாயின் மார் பற்றி  
வளரும் பகல்களும் 
சட்டகத்துக்குள் பொருந்தாத
வட்டங்களை 
வானவில்லின் வர்ணங்களில் 
வரைகின்றன 

சர்ப்பங்கள் நுழைய முடியா 
மருதாணிக்காட்டுக்குள் 
தோகை இல்லா மயிலினங்கள் 
மூக்குரசி 
அகவும் பொழுதுகளில் 

முகில்கள் மோதி நிறையும்  
பொய்கைகள் 
உன்மத்த வாசனை கொள்ளும் 

சன்னதம் கொண்டு  
மலை முகட்டு பட்சிகள் 
சிலிர்த்துச்சீறி 
வான் ஏகும் 

நன்றி : வலசை{ இதழ் 4}

Saturday, June 7, 2014

பூர்த்தி


வறண்ட
என் கர்ப்பச்சுவற்றுக்கு
கொஞ்சம் ஈரம் பூசி வைக்கிறேன்
 
ஒரு கவிதையை பிரசவிக்கும்
எத்தனிப்புடன்
 
கொஞ்சும் குழந்தை

108 சுற்று,
பலர் சுற்றி வந்த
பாதை தான்.
 
வெறுமை வானம் 
 
மேலும் இறுக மூடிக்கொள்கிறது
கருவறை
 
நிச்சலன பெருங்கூட்டில்
நான் தளர்ந்து வீழ்கையில்
கதவுடைத்து நுழைகிறது
முரட்டுத் தனிமை ஒன்று
 
***

நன்றி: யாவரும்.காம்

Wednesday, May 28, 2014

அதிர்ந்த கனவின் ஒற்றையடி நீள்பாதை




அங்கிருந்து
திரும்பிய நாளில் தான்
முடிவு செய்தேன்
என் நாவை
முடமாக்குவது என்று

கால் உடைக்கப்பட்ட நாவு
வன்மம் வளர்த்தது

கூன் விழுந்த என் முகத்தில்
அது
ஓயாமல் காறி உமிழ்ந்தது

யாரும் அறியாமல்
துடைத்துக்கொண்ட முகத்தில்
நான்
ராஜக்களையை ஏற்ற முயன்றேன்

என் இதயத்துடனான
முடநாவின் முணுமுணுப்பில்
ஏதோ சதி இருப்பதாய்
அஞ்சினேன்

நடுநிசிப்பொழுதொன்றில்
அது
என் தலைமயிரை சிரைக்க
முயல்கையில்

இதயத்தைக் கொன்றுப் புதைக்க
நான் துணிந்திருந்தேன் 

***
நன்றி: யாவரும்.காம் 

Thursday, May 8, 2014

தேவஸ்வரம்






அவள் வெகு தொலைவு கடந்து வந்திருக்கிறாள். விரட்டப்பட்ட 

ஒரு அநாதை நாய்க்குட்டியைபோல திசைகள் அற்று 

ஓடிக்கொண்டிருக்கிறாள். கால்களில் வழிந்தபடி 

இருக்கும் உதிரம் முட்களின் இரக்கமற்ற கூர்மையை 

எழுதிக்காட்டுகிறது.இந்த கான்க்ரீட் உலகத்தின் விரைத்த, நிலைத்த 

விழிகள் அவளை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அவள் ஓடுகிறாள். 

உருகும் தார் வாசனைக்கு அஞ்சி, பச்சையம் தேடி ஓடுகிறாள்.



அவளின்  மெலிந்த  கால்கள்  ஓர்  அடர்ந்த வனத்தின் வாசலில் 

அவளை கொண்டுவந்து சேர்த்திருந்தது. பாதைகள் அறியா 

அவ்வடர்ந்த வனத்தில் ஒரு பூனையின் தயக்கத்துடன் அவள் 

தனக்கான பாதையைத் தேடிக்கொண்டிருந்தாள். தடங்களைத் தேடி பாதங்கள் அலைபாய்ந்துக் கொண்டிருந்ததொரு உச்சிப்பொழுதில்தான் அவள் அவனைக் கண்டாள். தடித்த பலா மரத்தின் வேர்களில் அமர்ந்து அவன் பலாச்சுளையைப் புசித்துக்கொண்டிருந்தான். கனிந்த பலாச்சுளையின் சாறு இதழோரம் வடிந்து அவன் மார்பில் சொட்டிக்கொண்டிருந்தது. புடைத்து திரண்ட ஒரு மரத்தில் கோடாரியால் உண்டாக்கிய ஒரு சிறு பிளவிலிருந்து பொன்னிறக்கோந்து வடிவதுபோல் அது மிக மெதுவாய் வடிந்துகொண்டிருந்தது.



ஏற்கனவே அவன் அருகில் அமர்ந்துவிட்ட அவள் மனம் அவளை அருகில் வரச்சொல்லி கை அசைக்கவும் அவள் மெல்ல நகர்ந்து அவனை நெருங்கினாள். நிமிர்ந்து நோக்கிய விழிகளில் “ தெறிக்கும் இரு சூரியன்கள்”.

அவன் சொன்னான் , “ வழிதவறிய காட்டு மானின் மருண்ட விழிகள் உனது” என்று.



ஒரு மேய்ச்சல் சிறுவனின் உடல்மொழியோடு அவன் அந்த வனத்துடன் உறவாடிக்கொண்டிருந்தான். வனத்தின் வாசல்வரை அவளுக்கு வழித்துணையாக வருவதாக அவன் சொன்னான். அவள் பயணம் அங்கே முடிந்துவிட்டதாக அவள் பதில் அளித்தாள். அவன் அவள் கண்களைப் படிக்க முயல்கையில் விழி வாசல், அவள் கடந்து வந்த பாதை முழுவதையும் திறந்து காட்டியது. அவள், அவன் நிழலில் இளைப்பாறும் தனது விருப்பத்தை தெரிவித்தாள்.



அவன் கரம் அவளை நோக்கி நீண்டது. அவள் அதைப்பற்றிக்கொண்டாள்.

ஆணிவேரின் ஈரமும், வாசனையும் அதில் இருந்தது. மரங்களினூடே ஒரு தும்பியின் லாவகத்துடன் அவன் பறந்துகொண்டிருந்தான். அவளையும் அவன் சிறகுகளில் ஏற்றி இருந்தான்.



அவர்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு சிற்றாற்றின் கரை. அவன் அவளைப் பார்த்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டபடி புன்னகைத்தான். பின் மண்டியிட்டு அமர்ந்து மணலை கைகளால் தோண்டத்தொடங்கினான். அறியும் ஆவலோடு அவளும் அவனோடு சேர்ந்து மண்ணை வாரி வெளியில் போட்டுக்கொண்டிருந்தாள். கசியத்தொடங்கியிருந்த ஈரம் அவர்கள் இருவர் கைகளையும் நனைக்கவும் “ ஹே “ என்று சின்னதாய் ஒலி எழுப்பியபடி அவன் வேகம் கூட்டினான். அப்போது அவர்கள் கைகளுக்குப் பாசி படர்ந்த வெண்ணிற மணிகளை ஒத்தச் சொற்கள் தட்டுப்படத்தொடங்கின. அவன் சொன்னான், ”'நான் தினமும் இங்கு வருவேன்,எண்ணிலடங்கா எனது சொற்களை இங்கே புதைத்துவிட்டு மௌனத்தைப் போர்த்தியபடி அமர்ந்திருப்பேன். பின் இவ்வாற்றங்கரை புங்கைமரக்கிளையில் மூக்குரசியபடி இருக்கும் ஜோடிக்கிளிகளின் ஒலியை கொஞ்சம் சேகரித்துக்கொண்டு திரும்புவேன் ” என்று. .



இருவரும் கை நிறைய சொற்களை அள்ளிக்கொண்டு திரும்பத்தொடங்கினார்கள். மெளனமாக நடந்துகொண்டிருந்தவனின் முதுகில் கொஞ்சம் சொற்களை அள்ளி அவள் வீசினாள். அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பிய அவனிடம் நாக்கைத் துருத்திக்காட்டிச் சிரித்தாள் அவள். முகம் எல்லாம் மின்னல் தெறிக்க , கீழ் உதட்டைக் கடித்தப்படி அவன் கையில் இருந்த சொற்களை அவள் மீது அள்ளி வீசினான். அவள் சிரித்தப்படி விலகி ஓடினாள். அவன் துரத்திவந்தான்.  மாறி மாறி துரத்தியபடி சொற்களை ஒருவர்மேல் ஒருவர் வீசி விளையாடிக் களித்திருந்தார்கள் . மான் கூட்டம் ஒன்று தங்கள் மேய்ச்சலை நிறுத்திவிட்டு தலை உயர்த்தி அவர்களை வேடிக்கைப் பார்த்திருந்தது.



யானையின் அடிவயிற்றை ஒத்த பருத்த பாறைமேல் அவர்கள் இருவரும் வான் பார்த்துப் படுத்திருந்தார்கள் . சூரியன் குளிரத்தொடங்கி இருந்த அந்த அந்திப்பொழுதில், “ அருவியின் ஓசையை என்னுள் கேட்கிறேன்,ஒற்றைப் பனித்துளி ஒன்று என் உச்சந்தலையில் இறங்குகிறது, இன்று தான் நிகழ்கிறது இது ” என்று அவன் சொன்னான். பிறகு மெல்லமாய் உன் பெயர் என்ன என்று வினவினான். அவள் சொன்னாள்  “ வன உயிர்கள் பெயர் அற்றவை “.  மலர்ந்து எழுந்த அவன், அவள் இரு பாதங்களையும் மடியில் எடுத்துக் கிடத்திக்கொண்டான். அவள் தன் காயங்களைக் காட்டினாள். இவைகள் என்றும் மறையாது என்றாள். வழித்தடங்களுக்குப் பழகிய உன் பாதங்கள் நீ கடந்து வந்த பாதையை மறக்கும் நாளில், உன் காயங்கள் மறையும். நீயும் ஓர்வன உயிர் ஆவாய் என்றான் அவன்.



அடர்ந்த அயனி மரங்களை மூங்கிலால் இணைத்து அவளுக்காக ஒரு பரண் அமைத்தான். மந்திகள் தங்கள் குட்டிகளுக்குப் பாதாம் கொட்டைகளை உடைத்து உண்ணப் பழக்குகையில் அவன் அவளுக்கு வனத்திடமிருந்து உணவைப் பெரும் முறையை சொல்லிக்கொடுத்தான். உண்ணத்தகுந்த கிழங்குகள்,தவிர்க்கவேண்டிய கனிகள், காதுகொடுக்க வேண்டிய ஒலிகள், கவனிக்கவேண்டிய கால்தடங்கள் என்று கானகத்தின் பக்கங்களை அவனோடு சேர்ந்து அவள் கொஞ்சம் கொஞ்சமாய் வாசிக்கத்தொடங்கினாள்.



அவள் உதிரம் கண்ட நாளில், வனம் அவனை புதுவிதமாய் அறிந்தது. இரண்டு மடங்கு விழிப்புக் கொண்டவனாக ஆனான் அவன். ஒரு தாயின் பரிவை கணநேரத்தில் தன்னுள் கொண்டுவந்திருந்தான். காய்ந்த சருகுகளையும், விறகுகளையும் இட்டு தீ மூட்டி விடிய விடிய விழித்திருந்தான். அவன் கண்கள் தீக்கங்கு போல் சிவந்து ஒளிர்ந்தது. அவள் உதிரம் தோய்ந்த நிலமெங்கும் சாம்பல் கலந்த மணலை இட்டு மூடினான். உதிர வாடையை  விலங்குகள் அறியாதிருக்க அத்துனை சாகசங்களையும் செய்து முடித்தான். அவனே வன ராஜா .அவனே சிறந்த தோழன்.



அது, வானம்  மஞ்சள்பூசிய இளமாலை நேரம். அவன் அவள் கைப்பற்றி இழுத்துக்கொண்டு ஓடினான். தூரத்தில் உடலெங்கும் மிக நேர்த்தியாக வரையப்பட்ட கோடுகளுடன் புலி ஒன்று வந்துகொண்டிருந்தது. மூச்சிரைக்க ஓடி ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் அவர்கள் ஒளிந்துகொண்டார்கள். அவன் முதுகுக்குப் பின்னால் அவள் குறுகி அமர்ந்திருந்தாள். அவள் தன் முன்னுடலை அவன் மேல் சாய்த்திருந்தாள். அது அவளுக்கு கொஞ்சம் தைரியம்  தருவதாக இருந்தது. அவள் நெஞ்சு படபடப்போடு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கொழுத்த புலி கொஞ்சம் தொலைவில் மேய்ந்துகொண்டிருந்த காட்டு எருமைக்கூட்டத்தை நின்று கவனித்து விட்டு, பின் அசிரத்தையோடு  ஒரு மர நிழலில் போய் படுத்துக்கொண்டது. அவன் சொன்னான் “ அதற்கு பசி இல்லை”.அவர்கள்  கொஞ்சம் ஆசுவாசம் கொண்டனர்.



அவள்  இன்னமும் அவன் முதுகோடு ஒட்டி இருந்தாள். ஜோடி ஆமைகளின் மிக மெல்லிய நகர்வை அவன் முதுகில் உணரத்தொடங்கிய  வேளையில் அவன் திரும்பி அவள் விழிகளைப் பார்த்து சொன்னான் “ உன் ஆயுதங்கள் பலம் பொருந்தியவை “.  கரிய இரு நாகங்கள் முத்தமிட்டு விலகுவதைப்போல அவள் தன் புருவங்களைச் சுருக்கி “ புரியவில்லை “ என்றாள். அவன் உதட்டோரம் நெளியும் குறும்பு புன்னகையுடன் ''உன் ஆயுதங்களால் என்னை புறமுதுகில் தாக்காதே. ஒரு வீரன், ஆயுதங்களை நெஞ்சில் சந்திக்கவே விரும்புவான் '' என்றான்.  நொடிப்பொழுதில் கூசிச் சிவந்த மலர்முகத்தை ஒரு கையில் மூடிக்கொண்டு அவன் நடுநெஞ்சில் மறு கையைப் பதித்து பின்புறமாய் அவனைத் தள்ளி விட்டுவிட்டு  எழுந்து ஓடினாள். அந்நிமிடத்தில் செந்நிற செம்பருத்தி மலர்கள் மலர்ந்து ஒளிரத் தொடங்கின.



அந்த வனம் மிகப்புதிய இரவை அன்று சந்தித்தது. அடர்ந்த மௌனம் மான்களை பதற்றம் கொள்ளச் செய்தது. யானைகள் இருப்பு கொள்ளாமல் தங்கள் உடல்களை முன்னும் பின்னும் அசைத்தபடி இருந்தன. பறவைகள் தங்கள் இணை சேராமல் விழித்திருந்தன. காற்று மூச்சை இழுத்துப் பிடித்தபடி நின்றிருந்தது. மரங்கள் துவண்டு தலை சாய்த்திருந்தன. அவனும் அவளும் எதிர் எதிர் பரண்களில் வானத்தை வெறித்திருந்தார்கள். அவர்கள் இருவரின்  மூச்சுக்காற்றுகளும்  பாம்புகள் சீறும் ஒலியைப்போல விடியல் வரை ஒலித்திருந்தன. என்றும் அறியா புழுக்கத்தை வனம் அன்று கண்டிருந்தது.



வனம், தன் உறக்கம் தொலைத்த இரவுக்குப் பின்பான பகல் அவர்களுக்கு மிக நீண்டதாய் இருந்தது. அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். பசியை முற்றிலும் மறந்திருந்திருந்தார்கள். மௌனம் இருவரையும் கவ்விப்பிடித்திருந்தது. மனங்கள் இரண்டும் ஒரு புள்ளியில் குவிந்திருந்தது. எப்போதும் அவள் இயல்பாய் பற்றிக்கொள்ளும் அவனது விரல்கள் அன்று இயல்பைத் தொலைத்திருந்தது. அந்த சின்ன நடுக்கம் அவள் விரல்களிலா? அவன்விரல்களிலா? அவர்கள் சொற்களைத் தோண்டி எடுத்த அந்த சிற்றாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். வழக்கமாக அவர்கள் நீராடும் இடம் அது தான். கண்கள் சந்திக்கத் துணிவற்று, அவள் அருகிலிருந்த வெண்ணிற காட்டுமல்லிப் பூக்களைச்  சேகரிக்கத்தொடங்கினாள். அவன் மரத்துண்டு ஒன்றை எடுத்துவந்து தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கத்தியைக்கொண்டு செதுக்கத்தொடங்கினான்.



கதிரவன் உச்சியை அடைந்த பொழுதில், கொஞ்சம் மரவள்ளிக்கிழங்குகளையும், கொய்யாக்கனிகளையும் கொண்டுவந்தான்அவன். அவர்கள் மர வேர் ஒன்றில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள். கொய்யாக்கனிகளே அவர்களின்  விருப்ப உணவாக இருந்தது. சூரியனின் கதிர்கள் அடர்ந்த மரங்களைக் கடந்து வந்து அவர்களைத் தழுவிவிடத் தவித்துக்கொண்டிருந்தது.  அவள், சேகரித்த காட்டுமல்லிப் பூக்களை  மாலையாகத் தொடுக்கத்தொடங்கினாள். அவன் வலிய தன் கரங்களை நீட்டி மிக மென்மையாய் அவள் இதழோரம் ஒட்டியிருந்த கொய்யா விதையை எடுத்தான். பின் எழுந்து சென்று ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டு மீண்டும் மரத்துண்டை செதுக்கத்தொடங்கினான்.



அந்த நாள் அவர்களின் பிரக்ஞை அற்று மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. கதிரவன் மறையத்தொடங்கிய அந்திப்பொழுதில் அவன் நீராடச் சென்றான். அவள் மலர்மாலையில் கொஞ்சம் நீர் அள்ளித் தெளித்துவைத்துவிட்டு அவனைப் பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்திருந்தாள். யானையின் நீராட்டம் நீங்கள் கண்டதுண்டா? கரிய அதன் தோள்களில்  நீர்த்துளிகள் சரிந்து தெறிக்கும் காட்சி கிளர்ச்சி மிகுந்தவை,  காண்போரின் உடலில் அதன் குளுமையை உணரச்செய்பவை.

“  நீர் என்பது வெறும் நீரல்ல. அது, காலங்களை தன்னிடத்தில் பொதித்து வைத்திருக்கிறது. அது நம் மனங்களுக்குத் தக்கபடி தன்னைப்  பிரதிபலிக்கவல்லது “

அவன் கரை ஏறிவந்து அவள் அருகில் அமர்ந்தான். அவள் எழுந்து, மெல்ல தன் பாதங்களை எடுத்து வைத்தாள். அந்த ஆறு அவளைக் கைவிரித்து அழைத்தது. புற்களும் கருகிவிடக்கூடிய மிக மிகுந்த வெம்மை அவள் மூச்சுக்காற்றில் ஏறி இருந்தது. அவள் தன்உடலை நீருக்குள் நழுவவிட்டாள். காலைப்பனியின் சிலுசிலுப்பை பெற்றிருந்த அந்த ஆற்றுநீர் அவள் உடலின் அத்துனை திசைகளிலும் மோதிச் சிலிர்த்தது. அவள் மெதுமெதுவாய் குளிரத்தொடங்கினாள்.



ஈரஉடை அசைய நடந்து வந்து அவன் சிலையாய் சமைந்திருந்த பாறைமீது அவன் தோள்உரசி அமர்ந்தாள் அவள். கடலும்,ஆறும் ஒன்றுசேரும் இடத்தைப்போல் குளுமையும் வெம்மையும், மோதி உரசிக்கொண்டது அப்போது. அவன் மெல்ல திரும்பி அவள் கூந்தலிலிருந்து முதுகில் சொட்டிக்கொண்டிருந்த நீரை உள்ளங்கை ஏந்தி சேகரித்தான். பின் மெல்ல கண்மூடி அந்நீரைப் பருகினான். “ தாகம் கொண்ட விலங்கின் உதடுகள் அவை “. அவளது திரண்ட தோள்களில் நடுங்கிக்கொண்டிருந்த நீர் முத்துக்களை சுட்டுவிரல் கொண்டு துடைக்கத் தொடங்கினான். வானம் செந்நிறம் கொள்ளத்தொடங்கியது. பின் அவள் பாதங்களை எடுத்து மடியில் கிடத்திக்கொண்டு சொன்னான் “ உன் காயங்கள் ஆறி வருகிறது “. அவள் சொன்னாள் “ நீ காயங்கள் அற்றவன் “.மெல்லிய புன்னகை ஒன்றை தவழவிட்டபடி குனிந்து அவள் பாத விரல்கள் ஒவ்வொன்றாய் வருடி முத்தமிட்டான். 



அவன் அப்படித்தான். மிகுந்த ரசனைக்காரன், எதிலும் நிதானம் தவறாதவன். காட்டு முயலை சுட்டு சமைக்கையிலும் தன் தனித்த ரசனையை,ருசியை அதில் ஏற்றிவிடவல்லவன். ஒருமலரை நுகர விரும்பினாலும் இதழ் இதழாக மென்மையாக வருடி, அதன் மகரந்தப்பரப்புகளை முத்தமிட்டு பின் நுகர்ந்து ரசிப்பான்.  உச்சிக்கொம்புத்தேன் கிடைக்கும் நாளில் அடையோடு எடுத்து தின்பவன் அல்ல அவன். தேக்கு மரத்தின்  தளிர் இலையைக் கிண்ணம் போல் செய்து அதில் தேனை பிழிந்து கொள்வான். பின் அவளை ஆற்றங்கரைக்கு அழைத்துப்போய் நீரை ஒட்டிஇருக்கும் பாறையில் இருவருமாக அமர்ந்துகொண்டு பாதங்களை நீருக்குள் இருக்குமாறு வைத்துக்கொள்ளச் சொல்வான். பிறகு ஒரே ஒரு துளி தேனை நுனிநாக்கில் சொட்டி சுவைக்கச்சொல்லுவான். பாதங்களில் குறுகுறுத்து ஓடும் சில்லென்ற ஆற்றுநீரும் நுனிநாக்கில் கரையும் கொம்புத்தேனும் தேவ சுகத்தை தரும் நேரம் அது. பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேனை சுவைத்து முடிப்பார்கள். அவன் ரசனையே அலாதி..



அவள் பாதங்களை முத்தமிட்டு நிமிர்ந்தவன் அவள் தொடுத்து வைத்திருந்த மலர்மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான். ஜோடிக்கிளிகள் கத்திக்கொண்டு வந்து மரக்கிளையில் அமர்ந்தன. கிளிகளை அவள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அவள் கழுத்து நரம்பில் விரல் வருடிச் சொன்னான் “ உன் ஆடைகள் மிகவும் கந்தல் ஆகிவிட்டது “. பௌர்ணமி நிலவு திரண்டு எழுந்து தன் பால்வண்ண ஒளியை வனமெங்கும் பரப்பத் தொடங்கிய நேரம் அது. அவள், “ இன்று நிலவை பார்த்தாயா? அதன் ஒளி “ வெண்பட்டு விரிப்பு போல இருக்கிறதல்லவா?! “ என்றாள். அவன் ஆம் என்று தலையசைத்து “நாம் இருவரும் அவ்வெண்ணிலாவின் ஒளியை இவ்விரவில் ஆடையாக அணிவோமா?" என்றான். செந்நிற மீன்கள் மேல்எழுந்து அவள்  இரு கன்னங்களிலும் துள்ளத் தொடங்கியது. அவள் தனது வலது பாதத்தின் பெருவிரலால் அவன் மென்மயிர் படர்ந்த மார்பில் மெல்ல அழுத்தி சிரித்துவிட்டு எழுந்து ஓடமுயன்றாள். தொலைவில்  ஒரு யானை தன் வலிய துதிக்கை கொண்டு மூங்கில் புதர்களை வளைத்து இழுத்துச் சுவைத்துக்கொண்டிருந்தது. 



 சிரிப்பொலி வனமெங்கும் பட்டுத்தெறிக்க வனம் குதூகலம் கொண்டது. பறவைகள் கூவித்திளைத்தன. காற்று சுழன்று வீச மரங்கள் தலை சிலுப்பி ஆடின. விலங்கினங்கள் தங்கள் இணை சேர விளைந்தன. திருவிழாக்காலத்து தேர் தெருவைப்போல் கலவையான ஒலியில் காடு கள்  வெறி கொண்டது. தூறலில் தொடங்கிய மழை வேகம் கொண்டு அடைமழையாய் கொட்டித்தீர்த்தது.  நிலவின் மல்லிகை ஒளியில் அவள் அவனது மச்சங்களைக் கண்ட அவ்இரவில்தான் அவனது  தழும்புகளையும் காண நேர்ந்தது. அவனும் வடுக்களோடு வாழ்பவனே . வனம் கண்ட மிகுமழை, களைத்து ஓய்கையில் கதிரவன் காடேறி வந்தான். தன் மெல்லிய ஒளிக்கரங்களால் துவண்டிருந்த உயிர்களின் தேகம்தொட்டு வருடத்தொடங்கினான். 



                           ******* 

செ.சுஜாதா.
நன்றி: மலைகள்.காம்.