Saturday, September 28, 2013

மஞ்சள் ப்ஃராக் கடவுளும் நானும்






கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையைத் தளர்த்திக்கொண்டிருந்தது
அந்த நீண்ட தரிசன வரிசை
கட்டப்பட்ட கால்களைக் கைவிட்டு
பிரகாரத்தைச் சுற்றத்தொடங்கின கண்கள்
களவுபோகும் கழுத்துச்சங்கிலிக்கு
கடவுள் பொறுப்பல்ல என்று
அறிவித்தபடி இருந்தது ஒலிப்பெருக்கி
வானில்
வால்நட்சத்திரம் தோன்றிய தருணம் ஒன்றில்
என் முந்தானையைப் பிடித்து இழுத்தார் கடவுள்
பால்ஊறும் கன்னக்குழியில்
என் பார்வையைப் பறித்து அமிழ்த்திவிட்டு
அந்த தோள்களுக்குப் பின்னே மறைந்துகொண்டார்
அவரது உள்ளங்கை தழுவி
இதழ் பதித்த வேளையில்
என் ஊழ் தீர்ந்ததாய் உறுதி சொன்னார்
பின் கடவுளும் நானும் சேர்ந்து சென்று
கற்சிலை ஒன்றைக் கண்டு வந்தோம்

***
செ.சுஜாதா
நன்றி: சொல்வனம்.

Tuesday, September 3, 2013

கண் கூசும் வெயில்




வர்ணஜாலங்கள் காட்டிய 
நீர்க்குமிழிகள் 
வலுவற்று உடைந்து சிதறுகின்றன 

வீடற்ற வெற்று கதவுக்கு
இத்தனை வேலைப்பாடுகள் ஏன்?

நம்பிக்கை உடைசல்கள் மண்டிய 
அவ்இடத்தைவிட்டு விலகி நடக்கிறேன் 

அழுந்த சாயம்பூசிய உதடுகளும் 
வீச்சம் ஒழுகும்
குறிகளும் 
மலக்காடென
வழியெங்கும் சிதறிக்கிடக்கின்றன 

மிதித்துக்கொள்ளாமல் கடக்க 
ப்ரயத்தனங்களை
கால் கட்டைவிரல் நுனியில்
நிறுத்தி இருக்கிறேன் 

கூக்குரலிட்டு அழும் 
மனசாட்சி எனும் மண்ணாங்கட்டியை 
உருட்டி 
குட்டிச்சுவரில் அடித்துவிட்டுத் தொடர்கிறேன் 

மேலும்  
படகுக்குள் துள்ளும் மீனாய் 
சுவாசம் கேட்டுத் தவிக்கும்  
இருப்பு 
எந்தக் கண்ணாடியிலும் பிம்பமாக இல்லை.

பச்சை வாசனை வீசும் 
விரிந்த மரத்தின் வேர்களில் 
என் தலை சாயும் காட்சி
கால்கள் தள்ளாட 
தளர்ந்து சரியும் 
இந்நினைவில் கடைசியாய் நிற்கிறது 

****
செ .சுஜாதா .
நன்றி: நவீனவிருட்சம் .