Thursday, October 24, 2013

வாழ்ந்து கெட்ட வீடு





மின் விசிறிக்கு  நேர் கீழே 
அடம்பிடித்துப் பெற்ற என் படுக்கை 
இனி அங்கில்லை 

இரவு விளக்கின் முனகல் ஒளியில் 
அம்மாவுடன் அளவளாவ வரும் 
சிவசங்கரியும், பாலகுமாரனும் 
இனி ஏமாந்து திரும்புவர் 

குருதியெங்கும் சர்க்கரை ஓடும் அப்பா 
ஒளித்து தின்ற ஜிலேபி ரசம் 
அந்த ஜன்னலோரம் இனி சாட்சியாகாது

ஒருஎழுத்தாளரை உருவாக்கிவிட 
எழுதுகோலோடு போராடும் 
அண்ணனின்  அடையாள மரமேஜை 
பாதிவிலைக்கு வீடு மாறியாயிற்று 

தவறாமல் குளித்து தயாராகும் 
வாசல் திண்ணை அழுக்கேறும் 
அரட்டைக் கச்சேரி அற்று 

ஜல்லிக்கட்டு நாளில் 
திமிரித்திணறும் மொட்டை மாடி இனி 
வடகம் பிழிந்த வடுக்கள் தோறும் 
சொல்லி அழும் 

வர்ணங்கள்  உதிர்த்து 
தன் ரகசியங்கள் காட்டி நிற்கும் 
அவ்வீட்டின் கூரை மேல்
இன்னும்  காத்திருக்கும் காகங்கள் 

***
செ.சுஜாதா.

நன்றி: ஆனந்தவிகடன்