Sunday, April 14, 2013

வெளிச்சம்



என் கண் எட்டும் தூரத்தில் தான்
நீ நின்றுகொண்டிருந்தாய்

உன்னை நெருங்கி விடும் எத்தனிப்புடன்
நான் நகரத்தொடங்கும் தருணம்
உன் பிம்பத்தில்
அவர்கள்
முடிச்சுகள் இடத்தொடங்கினர்

உன் மௌனம் கர்வம் என அர்த்தப்படுத்தப்பட்டது
உன் உடல் மொழியில் அலட்சியம் வழிவதாய்
அவர்கள் சொன்னார்கள்
உன் தனிமையை அதிகாரத்தின் எல்லை
என்றும் அறிவுறுத்தினர்

புதிர்விளையாட்டின் முடிச்சுகளை
கலைத்துவிடும் ஆவலுடன்
உன்னுள் பயணிக்கத் தொடங்கிய என்னை
மலர் வனம் ஒன்றின்
நகரும் சிற்றோடையின் கரையில்
கொண்டுவந்து சேர்த்துவிட்டு
நீ மௌனிக்கிறாய்

****
நன்றி:வல்லினம்.காம் .


முதல் முத்தம்





அதுஅத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை
முன்னறிவிப்பின்றி நிகழ்ந்து முடிந்த முயற்சி
மீனை கவ்விக்கொண்டு பறக்கும்
பறவையின் துரிதக்கணம் அது
கன்னத்தின்
இதழ் சித்திரம் மட்டுமே
அது முத்தம் நிகழ்ந்த இடமென்று
அறிவித்துக்கொண்டிருந்தது
நினைவைக் கலைத்துக் கலைத்து அடுக்கிப்பார்க்கிறேன்
ஒரு முழு முத்தக்காட்சியை
கண்டுணரவே முடியவில்லை
ஆனால்
அதிர்வு அடங்கா நரம்புகளும்
கொதித்து ஓடும் குருதியும்
சொல்லும்
இதுபோன்றதொரு முத்தம்
இனி சாத்தியமே இல்லை என்று
*****
நன்றி:மலைகள்.காம் 

Friday, April 5, 2013

அன்பின் தீக்கொடி:





மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்
விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ 
அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய் 

வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி 
ஓயாமல் அலைகின்றேன்-நீயோ
மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை  சிபாரிசு செய்கிறாய்

இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய் 
வெம்மையில்  நசுங்கி வழிகிறது இரவு 

புயல் தின்ற  முதிர்ந்த நெற்கதிரென 
உன்  வயலெங்கும் உதிரும் எனது இருப்பு 

**********
நன்றி:கீற்று இணைய இதழ்.

Wednesday, April 3, 2013

தேன் - மொழி





நீண்ட நாளாக எனக்கு அந்த ஆசை இருந்தது.கடைக்குச் செல்லும்போதெல்லாம் என் பார்வை ஆசையாய் அதன் மேல் சென்று அமர்ந்து , பின் பெருமூச்சுடன் திரும்பும். இந்த வயசு, கண்ணுக்குத் தெரியாத ஓர்சாட்டையை நம் மீது சொடுக்கியபடியே இருக்கிறது. இந்த வயசில் ஆடாதே, இந்த வயசில் பாடாதே, சத்தமாகச் சிரிக்காதே, வேகமாக ஓடாதே ..ஷ்...அப்பா ..எத்தனை விதிகளைத் தான் சுமப்பதோ? ஆசைக்கு வயசு உண்டா என்ன? 

நான் இன்றும் கடைக்குப் போனேன். கடைக்காரரைத் தவிரக் கடையில் வேறு யாரும் இல்லை. உச்சி வெயில் நேரம். கார்டன் சிட்டி என்ற பேர் எல்லாம் காலாவதி ஆகி, பெங்களூர் பொங்கல் பானையாகப் புழுங்கத் தொடங்கி வெகுகாலம் ஆகிறது. இன்று துணிந்து விட்டேன். கடைக்காரர் என்ன நினைத்தாலும் சரி இன்று அதை வாங்கி விடுவதென்று. 

நகரவாசிகள் அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு கிராமத்து மனிதரும் தன் பால்யத்தை, அந்த தின்பண்டத்தின்  சுவையில் கொஞ்சமேனும்  அமிழ்த்தி எடுத்து வந்திருப்பார்."தேன் மிட்டாய்".

நான் என் சிறுவயதில் தேன் மிட்டாய்க்கு அடிமை. தினம் தவறாமல் வாங்கி சாப்பிடுவேன். இப்போதெல்லாம் பிள்ளைகள் 'அம்மா டீ பிரேக்ல கேண்டீன் போகணும் பணம் கொடுங்க 'என்று வெகுஇயல்பாகக் கேட்டு வாங்கிப் போகிறார்கள். தினமும் பாக்கெட் மணி வேண்டும் கட்டளைப் போடும் பிள்ளைகளும் உண்டு. நானோ, என் தோழிகளோ வீட்டிலிருந்து ஒரு ரூபாய் பெற்று வருவதைப் பெரும் சாதனையாக எண்ணி இருக்கிறோம்.ஊரிலிருந்து உறவினர் யாரேனும் வந்துவிட்டுச் செல்லும்போது 5,10 என்று நோட்டை தந்துவிட்டு போகும் அதிர்ஷ்டம் எப்போதாவது வாய்ப்பதுண்டு. ரூபாய் நோட்டு கையில் இருக்கும் நாளில் பெரும் ராஜகுமாரியின் தோரணையோடு தோழிகள் புடை சூழ கடைக்குச் சென்று தேன் மிட்டாய்களை  வாங்கி எல்லோர்க்கும் இலவசமாக வழங்கி கெத்து காட்டுவதுண்டு. நீங்கள் என் உற்ற நண்பர் என்று நம்பி ஓர் உண்மையையும் இங்கு சொல்கிறேன். அப்பா காசு கொடுக்காமல் திடீர் கஞ்சனாக மாறும் நாட்களில் நானும் உடனடி அவதாரம் ஒன்றை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆம்..அலமாரியில் அப்பா கழற்றித் தொங்கவிடும் அந்த வெள்ளை சட்டையின் பெரிய பாக்கெட்டுக்குள் கையை விடவேண்டி வரும். சில்லறைக் காசுகள் வரை துணியும் கை ரூபாய்க்கு பின்வாங்கும். 

இன்று பணம் கையில் இருக்கிறது. வயது கைநழுவிச்சென்று கெக்கலிக்கிறது. வாங்க வேண்டிய மற்ற சாமான்களை எல்லாம் வாங்கிவிட்டு, வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்களில் ஒன்றில் இருந்த அந்த சிவந்த தேன் மிட்டாயில் ஒன்றை எடுத்துகொண்டே இது நல்லா இருக்குமாங்க? என்று கேட்டே விட்டேன். கடைக்காரர் சிரித்தபடி தலைமட்டும் ஆட்டிவைத்தார். பொதுவாக வளவளப்பான காகிதத்தில் சுற்றப்படாத, இப்படி திறந்த நிலையில் இருக்கும் மிட்டாய்கள் தரக்குறைவானதாகப் பார்க்கப்படுகிறது. அவற்றை யாரும் வாங்குவதே இல்லை. ஆனால் எல்லாத் தெருமுனை கடைகளிலும் அவை இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை விரும்பி  வாங்கவும் இன்னும் குழந்தைகள் இருக்கிறார்கள். 

ஒரு மிட்டாயை எடுத்து அங்கேயே கடிக்கத்தொடங்கினேன். அத்தனை அவசரம்.. சும்மாவா ?!  எத்தனை வருட ஆசை!!  என் பள்ளி வயதில் தேன் மிட்டாய் சின்னது 25 பைசா, பெரியது 50 பைசா. சின்ன மிட்டாயில் கடித்தால் உள்ளே தேன் இருக்காது. [தேன் என்றதும் தேனேவா? என்று கேட்காதீர்கள். சர்க்கரை பாகுதான்].ஆனால் அப்போதெல்லாம் அது தேன் என்று தான் நினைத்திருந்தேன். அறியாமை தான் எத்தனை சுகமானது?!! பெரிய மிட்டாயில் கடித்தால் தேன் சொட்டும். கொஞ்சம் கவனம் குறைந்தால் தேன் வாயிலிருந்து நழுவி விரலில் சொட்டும். மிட்டாயும் பஞ்சு போல அவ்வளவு மிருதுவாக இருக்கும். இன்று தேன் மிட்டாயின் விலை ஒரு ரூபாயாக உயர்ந்திருக்கிறது. விலைவாசியின் ஜெட் வேக உயர்வை கணக்கில் கொள்ளும்போது இந்த மிட்டாயின் விலை ஏற்றம் ரொம்பவும் மந்தம் தான். நான் எனது இத்தனை வருட ஆசையை, தவத்தை அடையும் விதமாக என் அனைத்து விதிகளையும் , சுமைகளையும், அரிதாரங்களையும் கழற்றி எறிந்துவிட்டு அந்த தேன் மிட்டாயை கடித்துச்சுவைத்தேன். கொஞ்சமும் மிருதுத்தன்மை அற்று, காய்ந்து போய், கடினமாக, லேசாய் புளிப்பு சுவையை என் நாவில் பரவவிட்டபடி  என் மனதிற்கினியத் தேன் மிட்டாய் இத்தனை கால ஆசையை அடியோடு வெட்டிச் சாய்த்தபடி என் தொண்டைக்குழியில்  இறங்கியது. இனி ஒருபோதும் மீட்டெடுக்க முடியாத என் பால்யகாலத்தைப்போலவே 
தேன் சொட்டும் அந்த மிட்டாயின் சுவையை இனி நான் அறியவே முடியாது என்று அது சொல்லாமல் சொல்லியது. என் வாழ்நாளின் கடைசித் தேன் மிட்டாய்க்கான ஒரு ரூபாயை கடைக்காரரிடம் தந்துவிட்டுத் திரும்பத்தொடங்கினேன்..  

                                                  *****************

Tuesday, April 2, 2013

மரணக்குறிப்பு





நான் அந்த முடிவை எடுத்த நொடி பெரும் விடுதலை  உணர்வை அடைந்திருந்தேன்.சீழ் கட்டிய புண் ஒன்றை கீறி திறந்ததன் ஆசுவாசம்.இதை தற்கொலை என்று சொல்லாதீர்கள்.கொலை என்பது வன்முறை.விருப்பமற்ற ஒருவரிடம் மரணத்தை வலிந்து திணிப்பது.ஆனால் என்னுடைய மரணம் அப்படியானதல்ல.கதறிக்கொண்டு ஓடி ,கண்ணை மூடியபடி  கிணற்றில் விழுவது போல் அல்ல ,ஆடைகளை சாவகாசமாய் களைந்துவிட்டு  , கை உயர்த்தி கூந்தலை கொண்டையாக்கிகொண்டு ,சோப்பும்,மஞ்சள் கிண்ணமுமாக ,திறந்த முதுகில் சூரியனை படரவிட்டபடி ஆற்றில் குளிக்க இறங்கும் ஓர் இளம் பெண்ணை கற்பனை செய்துகொள்ளுங்கள்.எவ்வளவு ரசனையான காட்சி?!!அத்தகைய லாவகத்துடன்,ரசித்து என் மரணத்திற்குள் இறங்க இருக்கிறேன்.இப்போது  சொல்லுங்கள் அது தற்கொலையா?

சிலிண்டரை திறந்து விட்டு,அறை முழுதும் நிரப்பி ,ஒரு தீக்குச்சி உரசலில் வெடித்து சிதறலாமா?என்னை  நவீன ஜான்சி ராணி போல் உணரச்செய்யும் என் பிரியமான இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்று மணலை திருடிக்கொண்டு ஓடி வரும் அந்த லாரியின் முகத்தில் மோதிச்சரியலாமா?இல்லை இல்லை…என் மரணத்தை வரவேற்கும் முறை இதுவல்ல.மிக மென்மையாய் ,ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றி அணுகவேண்டும்.ம்ம் ..எங்கள் தோட்டத்து பூச்செடிக்கு போடும் மருந்து ஒன்று வீட்டின் கடைகோடி மூலையில் ஒரு அலமாரியில் இருக்கிறது.குழந்தைகள் கைக்கு எட்டிவிட கூடாதென்று அது அங்கு அத்தனை பாதுகாப்பாக இருக்கிறது.அது எப்படி இருக்கும்?என்ன நிறம்?எதையும் இதுவரை அறிய முயன்றதில்லை.அதை குடித்தால் உடனே உயிர் போய்விடுமா?தோட்டக்காரன் செடிக்கு மருந்தடிக்கும் போது அருகில் சென்றதில்லை.மறுநாள் இறந்துகிடக்கும் புழுக்களை குரூரமான சந்தோசத்துடன் எண்ணிபார்த்ததுண்டு.அவை துடி துடித்து இறந்திருக்குமா?இல்லை மலர்கள் உதிர்வது போல இலையிலிருந்து கண்மூடி உதிர்ந்திருக்குமா?எப்படியாயினும் புழுக்களுக்கான விஷம் அது.இந்த வீட்டில் நானும் ஒரு புழு என்பதை உணர்ந்த இந்த கணம் அந்த விஷத்தையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.

நான் ஒரு சொற்க்கிடங்கு.அள்ள அள்ள குறையாத அமுத பாத்திரம் அது.அதிலிருந்து முடிந்தவரை அள்ளி என் வாழ்வில் உடன் வந்தவர்களுக்கு தந்துவிட்டு போக விரும்புகிறேன்.நான் எழுதபோகும் முதல் கடிதம் என் குருவுக்கு.ஆம் குரு தான் அதில் மாற்றம் இல்லை.இதுவே நான் அவருக்கு எழுதப்போகும் கடைசி கடிதம்.இதற்க்கு முன் நிறைய எழுதி இருக்கிறேன்.என் குழப்பங்களை,கஷ்டங்களை,தீர்வுக்கான வழிகளை,மன உளைச்சல்களை என்று எண்ணில் அடங்கா மின் அஞ்சல்கள்,குறுஞ்செய்திகள் அனுப்பி இருக்கிறேன்.ஏதோ கடவுளிடமே நேரடியாக முறையிட்டு விட்டதை போன்றதொரு நிம்மதி அப்போது கிடைக்கும்.கடவுளுக்கு கண் இல்லை,காது இல்லை,வாயும் இல்லை.நம் எந்த புலம்பலும் அவரை எந்த விதத்திலும் பாதிக்காது,எரிச்சல் படுத்தாது.ஆனால் பாவம் அவர் மனிதராயிற்றே!!அவரிடம் முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

என் இரண்டாவது கடிதம் என் தோழிகளுக்கு.எனக்கு எல்லா தோழிகளும் ஒன்று தான்.யாரிடமும் தனிப்பட்ட பகிர்வோ,ரகசியமோ இருந்ததில்லை.என் சந்தோசங்களை,வருத்தங்களை எங்கள் தேநீர் மேஜையில் பகிர்ந்து கொள்ள நான் தவறியதில்லை என் ஆணி வேரில் விழுந்த அடியை தவிர..அவர்களுக்கு என் மரணம் பேரதிர்ச்சியை தரலாம்.எந்நேரமும் வெடிச்சிரிப்பும்,விளையாட்டு பேச்சுமாக இருக்கும் என்னை முழுதும் படிக்க முடியாமல் போனதை எண்ணி மனம் வருந்தலாம்.எந்த இறுக்கமான சூழ்நிலையையும் கட்டவிழ்த்து கலகலப்பாக்கும்  நான் அவர்களை கண்ணீரோடு நிற்கவைக்கப்போவதை எண்ணி வேதனை கொள்கிறேன்.

என் கடைசி கடிதம் என் பிள்ளைகளுக்கு.இங்கு தான் நான் சற்று கவனமாக இருக்கவேண்டும்.அடர்ந்து வீசும் முலைப்பாலின் மணத்திற்கு இருக்கும் வல்லமையை நான் பல நேரங்களில் கண்டிருக்கிறேன்.அது எந்நேரமும் என் முடிவை தகர்த்துவிடலாம்.முடிச்சிடப்பட்ட என் கர்ப்ப பை எந்த நேரமும் என்னை உள்ளிழுத்து சிறை படுத்தலாம்.என் தாய்மைக்கு நான் சமாதானம் சொல்லியாகவேண்டும்.இங்கு நான் சற்று கடுமையாகவே பதில் உரைக்கவேண்டும்.என் இருப்பு அவர்களையும் ஒரு புழுவாக மாற்றக்கூடும்.அவர்களுக்கேனும் முதுகெலும்பு முளைக்கவேண்டும்.அதற்க்கு அவர்கள் பற்றுகோலை இழந்தாகவேண்டும்.தடுமாறி,தளர்ந்து பின் முளைத்து கிளை பரப்புவார்கள்.என் இறுதி நம்பிக்கையை அவர்களிடம் தான் விட்டு செல்கிறேன்.அவர்கள் வாழ்வார்கள்.ஓடு உடைத்து வெளியேறும் வலி அறிந்தால் மட்டுமே பறவைக்கு வானம் சொந்தம்.வலி அறியாமல் என்னை வளர்த்துவிட்ட என் தாயை நான் நினைத்துக்கொள்கிறேன்.அம்மா,என்னை மன்னியுங்கள்..

இந்த வீடு என் மரணத்தை எப்படி எதிர்கொள்ளும்?சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்றுவிட்ட வேலைக்காரியால் எப்படி வீட்டின் அன்றாட வேலைகள் தடுமாறிப்போகுமோ அப்படி கொஞ்சம் தடுமாறித்தான் போகும்.ஆனாலும் சீக்கிரமாக சுதாரித்துக்கொள்ளும்.ஆம்,”கூரை மேல் சோற்றை விட்டெறிந்தால் ஆயிரம் காக்கா”என்ற வாக்கியத்தை என் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அறிந்து வைத்திருக்கிறது.சோறு உள்ளவரை காக்கைகளுக்கும்  பஞ்சம் இல்லை.

எனக்கு மெலிதாக ஒரு அச்சம் வருகிறது.இப்படியே பேசி பேசியே என் துக்கத்தை நான் கடந்துவிடுவேனோ?!என் பயத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது.என் நான்காவது வயதில் என் அம்மா இதே முடிவை எடுத்திருந்தார்.நானும்,அண்ணனும் விரும்பி கேட்ட திரைப்படம் ஒன்றிற்கு கடைசி கடைசியாக அழைத்து சென்றுவிட்டு வந்து பின் சாகலாம் என்ற முடிவோடு எங்களை அழைத்துச்சென்றார்.உருளைக்கிழங்கு போண்டாவை ருசித்தபடி நாங்கள் ரசித்து பார்த்த அந்த படம் முழு நீள நகைச்சுவை திரைப்படம்.விழுந்து விழுந்து சிரித்து,படம் முடிந்து வெளியே வரும்போது அவள் துக்கம் முழுதும் கரைந்து போயிருந்ததையும்,குடிகார புருசனோடு முடிந்தவரை மல்லுக்கட்டி வாழ்ந்துவிடுவது என்ற முடிவோடு வீடுவந்து சேர்ந்ததையும் அம்மா பின்னாளில் எனக்கு சொல்லியிருக்கிறார்.ம்ம்,பார்ப்போம்..

பெண்களின் கனவுக்குள் நுழைந்து பார்த்தால் நீங்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும்.அத்தனை சட்ட திட்டங்களையும்,கட்டமைப்புகளையும் உடைத்து நொறுக்கி  அதன் மேல் எழுந்து நின்றிருக்கும் அவள் கனவுக்கோட்டை.அதற்காக நீங்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை.அவர்களுக்கு  கனவு காண மட்டுமே தெரியும்.அதை நடைமுறைப்படுத்திக்காட்டும் பரிணாம வளர்ச்சியை அவர்கள் இன்னும் எட்டவில்லை.எனவே நீங்கள் அவர்களை கையாளும் பாணியில் அவசர மாற்றம் ஏதும் செய்யத்தேவை இல்லை.அலை கரை கடக்காதவரை நீங்கள் நடை பயிற்சி மேற்கொள்ளலாம்,குந்தி மலம் கழிக்கலாம்,போதையோடு புரண்டு கிடக்கலாம்,புணர்ந்து கிடக்கலாம்.பாதகம் இல்லை.  நான் சொல்லவந்தது இதுவல்ல.எல்லா பெண்ணும் செயல்படுத்திக்காட்டப்படாத தற்கொலை கனவு ஒன்றை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டிருப்பாள்.தற்காலிக வலி நிவாரணியாய் அந்தக்கனவுக்குள் சற்று இளைப்பாறி வந்திருப்பாள்.

இறுதியாக “என் மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல”என்ற கடிதம் ஒன்றை எழுதி வைக்கவேண்டும்.ஆமாம்,நான் கொள்ளும் இன்பம்,துன்பம் யாவற்றிற்கும் நான் மட்டுமே பொறுப்பாகமுடியும்.யாரையும் கை நீட்டி காரணமாக்குவது சுத்த பேடித்தனம்.மரண வாசலில் நான் ஒரு புழு அல்ல.உணர்வும்,உதிரமும் ஆகிய மனிதன்.’மனுஷி’ என்று சொல்ல வேண்டுமோ?வாழ்க்கையில் தான் ஆண்,பெண் என்ற பேதம் எல்லாம்..மரணத்தின் முன் அத்தனையும் வெறும் உடல்கள்  தான்.இங்காவது நான் நானாக இருக்க விரும்புகிறேன்.என் இந்த முடிவேனும் என் சுயவிருப்பத்தோடு,தனிச்சையாக ,நிர்பந்தங்கள் ஏதுமற்றதாய் இருக்க விழைகிறேன்.ஆம், என் முடிவுக்கு நானே பொறுப்பு.

என் வாழ்வில் வந்து போன அத்தனை பேரையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.நான் கடந்து வந்த அத்துனை சம்பவங்களையும் பாரபட்சம் இன்றி ஒரு முறை புரட்டிப்பார்க்கிறேன்.ஆஹா!!அத்துனை சம்பவங்களும் ஒன்று போல் தெரிகிறதே?! ‘ விடுபடல் ‘ என்பது இது தானா?எந்த உணர்வுகளும் கலக்காமல் தெளிந்த காட்சிகளாக அனைத்தையும் பார்க்கமுடிவது எவ்வளவு லேசாக,பாரமற்று இருக்கிறது?!!கடவுள் இப்படி தான் இப்பூமியை பார்ப்பாரோ?!ஆம்,அப்படி தான் இருக்கவேண்டும்,இல்லை என்றால் அவர் இந்நேரம் பைத்தியமாகி இருப்பார்.

சரி,நான்  இறுதியாக உங்களுக்கு ஒன்றை சொல்லிவிட்டு விடை பெறுகிறேன்.நான் எழுதி எழுதியே என் துக்கத்திலிருந்து மீண்டிருக்கவேண்டும் என்றும்,நான் என் முடிவை கைவிட்டு என் அம்மாவை போல்  மீண்டும் வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என்றும் வருந்தி இறைவனை பிரார்த்திப்பவரா நீங்கள்?மன்னிக்கவும்.நீங்கள் இவ்வுலகில் வாழும் தகுதியை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டிஇருக்கிறது.மாறாக இதை மற்றுமொரு செய்தியாக மட்டுமே கடந்து போகிறவராகவோ அல்லது என் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே உள்ளவராகவோ நீங்கள் இருக்கிறீர்களா?..வாழ்த்துக்கள்!!! .


                                                    *********************
நன்றி:மலைகள்.காம் 

நம்பிக்கையின்மையின் சொல்





நாவின் பிளவிலிருந்து 
தெறித்துப் பாயும் அச்சொல் 
என் முகமெங்கும் கசந்து வழிய..

நீ அற்றத் தனிமையிலும் 
உன் இருப்பை உறுதிசெய்யும் 
அச்சொல்லின் முனை உறையும் 
குருதியின் வீச்சம்

தோட்டத்து அணில் அச்சொல்லை 
சுமந்துச் செல்ல முயல்கையில் 
ராமனின் விரல்களில் தீ மூளும்
மலர்வனம்  ஒன்று வெந்துத் தணியும் 

விருப்ப உணவென எண்ணி அதை 
விழுங்கிச் செரிக்க முயல்கையில் 
இதயத்தை இறுக்கிப் பிழிந்து தன் 
கோப்பை நிறைத்துத் திரும்பும் 

பாதி அழுகிய பிணத்தினை
நாய்கள் தோண்டும் இரவில் 
யோனி அறுத்து இறங்கும்
வன்மம் வடியும்  அச்சொல்

*****
நன்றி:உயிரோசை.

நிசப்தம் உடைக்காதே





அந்தரக் கயிற்றுச்சிறுமியின் 
பாதத்தில் நெளியும் பதற்றமாய் 
அதிர்ந்து நிறைகிறது நம் வானம்

விரிவதென்ன 
பூக்காடா? 
தீக்காடா?

********
நன்றி:உயிரோசை.

Monday, April 1, 2013

யுகம் கடக்கும் யாத்திரை:




தடம் மாற்றி தாழ சரியும் 
என் நதி ...
சுழித்தோடும் அதன் விசித்திரங்கள்
ஓர் கன்னக்குழிவை 
ஓர் தொப்புள் சரிவை 
ஓர் யோனிதிறப்பை
ஒத்ததாய் புன்னகைக்கும்...
காலத்தின் கடைசி இழையில்
காத்திருக்கும் உன் வெம்மையில் 
கரைந்து சாகும் வரை
ஓடும் ஓடும் ...
இந்நதி..
தீரா தாகம் கொண்டு 
தீயையும் தின்று ஓடும்...

****
நன்றி:உயிரோசை.