Friday, March 29, 2013

உயிர் விளையாட்டு!




அட்டவணையில் சிறை சிக்கி 
அழுகிறது நம் காலம்...

கட்டம் கட்டமாய் நகர்ந்து சென்று அடையப்போகும்
உனக்கும் எனக்கும் அறியா அம்முடிவில்
வாழ்தலின் அர்த்தம் தெளிவு பெறுமோ!

அட்டவணை கிழித்தெறிந்து 
அம்மணம் தரித்துக்கொண்டு 
ஆதிக்கே திரும்பிச் செல்லுதலெனும் 
ஒரு பேரர்த்தமுள்ள
அல்லது
ஒரு அபத்தம் நிறைந்த
எனது ஆசையினை
எதிர் நிற்கும் உன்னிடம்
எங்கனமாவது வெளிக்கொணர முனைந்தால்...

எனது கரங்களை இறுகப் பற்றிக்கொள்வாயா
இல்லைஇனி எப்பொழுதுக்குமென
எனைவிட்டு தொலைந்து போவாயா!?

*****
நன்றி: உயிரோசை.

முத்தம் என்பது முத்தம் மட்டுமல்ல




பெருமழைக்கால முன்னிரவுப் பொழுதொன்றில் 
உறைந்த உதடுகளோடு  
நீ என் வீடு வந்தாய் 

சிக்கித்தவிக்கும் வார்த்தைகள் உண்ண 
வெம்மை சமைத்த உதடுகள் கேட்டாய் 

உடல்கள் குவிந்து கரைந்து 
உதடுகள் மட்டுமே எஞ்சிய 
ஒளி கசியும் இருள் பொழுதில்  
தவித்துச்சிறகடிக்கும் ஜன்னல் வழி
ஒற்றை எழுத்துச்சொல் ஒன்று 
வெட்கிச் சிவந்து வெளியேறும் 

முத்துக்குளிப்பவனின் ஆவல் எனக்கு
அருவி மீனின் பாய்ச்சல் உனக்கு

நீ நான் அற்ற  
நாம் இவ்வுலகை கைவிட்ட தருணம்..  
வெளியே மழை வலுத்திருந்தது.

*****
நன்றி:உயிரோசை.

உடைந்து ஒழுகும் பிரியம்:







புழுங்கும் மௌனச்சுவற்றுக்குள்
நான் தனித்திருக்கிறேன்..    

நுழைய முயன்ற
மெல்லிய இசை ஒன்று
வெறுமையின் சுவற்றில் அலகு மோதிச் சரிகிறது

என் விலக்குநாட்கள் யாசிக்கும்
உன் புன்னகையின் துளி ஒன்றை,ஏனோ
நான்காம் நாளில் எடுத்து வருகிறாய்
சமாதானத்தின் கைக் கோர்க்க 

ததும்பும் அட்சயப்பாத்திரம் ஒன்று 
இடறிக் கவிழ்கிறது  
குப்பைக்கூடையில்,

வண்ணம் வெளிறியச் சொற்சிதறல்களாய் 
உடைந்த இசைக்குறிப்புகளாய் 
பயன்படுத்தப்பட்ட ஆணுறைககளாய்

******
நன்றி:கீற்று.

வர்ணங்கள் குளிரும் ஞாபகங்கள் பெய்யும் தனிமை





தோட்டம் பார்த்த முற்றத்தில்  
நம் காலடி தடம் தேடும் சருகுகள் 
இன்னும் காத்துக்கொண்டு தான்இருக்கிறது 
நமக்கான தேநீர் மேசை அங்கு ...

கொதித்து ஆவியாகும் சொற்கள் 
புகைபோக்கியில் மோதி உறைகின்றன  

தவறாமல் வாசல் வரும் 
இளமாலை வெயிலுக்கு என் 
மௌனங்களை நுரைக்க ஊற்றித்தருகின்றேன் 

சர்க்கரையை சுமந்து செல்லும் எறும்புகள் 
இம்மாலைக்குள் வீடு சென்று சேரட்டும் 

நிரப்பப்படாத என் கோப்பையின் விளிம்பில் 
தன் மகரந்தப்பாதங்களை பதித்துச்செல்கிறது 
வழி தவறி வந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று 

******
நன்றி:உயிரோசை.

Thursday, March 28, 2013

வெயில் வளரும் பாதங்கள்




தேர்ந்த வித்தைக்காரன் நீ
குறித்த இடத்தைப் பிசகாமல் சென்று
தைத்துவிடும் அம்பு உன் சொற்கள் 

ஒரு குழந்தை கதைசொல்லியினைப் போலுன்னை
நெருங்க எத்தனித்து ஒரு திடும் தருணம்
மிக லாவகமாய் நறுக்கி எடுக்கிறாய்
என் இதயத்தின் பாகங்களை

சமயங்களில்
உன் பெயர் எழுதப்பட்ட பருக்கைகளை
எனக்கு வழங்கும் பெருந்தன்மை உனது
ஆயினும் 
அதில் கொஞ்சம் உமிழ்ந்துக் கொடுக்கும்
உரிமை உனக்கு உண்டு

உன் பாதம் நக்கும் உடல் ஒன்றைக் கைவிட்டு
வெளியேறும் எனது உயிர் 
இரவு பைத்தியத்தின் ஏகாந்த தனிமையில் 
மிதந்து நகர்கிறதுஉன் எல்லையினை கடந்து..

******

நன்றி:உயிரோசை.

நினைவுகள் பேசிக் கொண்டிருக்கட்டும்:






நீளும் நம் உரையாடலில்
இடையிடையே மௌனத்தை
வார்த்தையாய் கோர்க்கின்றாய்

நாம்
திரும்பும் வரை பேசிக் கொண்டிருக்கட்டும் 
நினைவுகள்

தவித்துக்கடக்கும்
விடை அறியா வெற்றிடத்தில்
ஒரு முத்தத்தை இட்டுச்செல்

வசந்தி


அம்மா கத்திக்கொண்டிருந்தாள்.
'ஒரு தோசையோட எழுந்துறிச்சு ஓடற! என்னடி அவ்ளோ அவசரம்?'
'போம்மா, போட்டி ஆரம்பிச்சுடுவாங்க காசு குடும்மா, ' சீக்கிரம் . கையை கழுவிக்கொண்டே பரபரத்தாள் வசந்தி.
அம்மா கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு அரை பாவாடை காற்றில் பறக்க படி இறங்கி ஓடினாள். அவள் ஓடுவதையே பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு மனம் நெகிழ்ந்து போனது. கூடவே நேற்று அந்த முத்தாயி கிழவி சொன்னதும் நினைவில் நிழலாடியது.
"மல்லிகா! ஒம்மவ திமு திமுன்னு வளந்துட்டாடி!! சீக்கிரம் உக்காந்துடுவா, இனிமே இந்த அர பாவாட எல்லாம் போட விடாத."
வாசலில் நொண்டி விளையாடி கொண்டிருத்த மகளையே பார்த்தபடி அவள் சொன்னாள்,
"யம்மா நீங்க ஒன்னு! அது இப்பதான் அஞ்சாவது படிக்குது, நான்லாம் பதினஞ்சு வயசுல தான் வந்தேன். ஒடம்பு அவங்க அப்பா மாதிரி கொஞ்சம் ஊக்கமான ஒடம்பு."
எழுந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டாள். ச்சே, மொதல்ல பிள்ளைக்கு சுத்தி போடணும்.
வசந்தி மாநிறம். துறு துறுன்னு அவ வீட்ல இருந்தா வீடே றெக்க கட்டுன மாதிரி படபடத்து கிடக்கும். ஒத்த புள்ள தான். ஆனா அவ தோழி பட்டாளம் எப்பவும் அவகூடவே இருக்கும். சாப்பாடுலயும் கொறவு இல்ல. அந்த கிழவி சொன்ன மாதிரி வசந்தி வயசுக்கு மீறி வளர்ந்திருந்தாள். ஆனால் மனசு அவள் வயதுக்குரிய குழந்தைமையோடும், குதூகலத்தோடும் நிறைந்திருந்தது.
வெய்யில் ஏறி வந்துகொண்டிருந்தது. ஹை ஸ்கூல் பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டி அன்று. ஊர் எல்லையில் இருந்த பள்ளி மைதானத்தில் பெரிய பசங்களும், விளையாட்டு வாத்தியாரும், வாட்ச் மேன் அண்ணனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
சுண்ணாம்பு தூள் கொண்டு ஓட்டப்பந்தயத்துக்கு பாதை போட்டுக்கொண்டிருந்தார்கள். வசந்தி தன் தோழிகளோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஏய் பிள்ளைங்களா! இங்க வாங்க, நீ அந்த சுண்ணாம்பு டப்பாவ அந்த அண்ணன்கிட்ட குடுத்துட்டு வா, நீங்க ரெண்டுபேரும் அந்த டேபிள் எடுத்து நடுவுல போடுங்க, அங்க நாற்காலி எல்லாம் அடுக்கி இருக்கு பார், எல்லாத்தையும் பிரிச்சி வைங்க!"
வாத்தியார் சொன்னதும் வசந்திக்கும் அவள் தோழிகளுக்கும் ஒரே குஷியாகிவிட்டது. ஓடி ஓடி வேலை செய்தார்கள். போட்டியே அவர்கள் தலைமையில் தான் நடப்பது போல ஒரே பெருமை. தலை கால் புரியவில்லை.
சிறப்பு விருந்தினர் வந்து போட்டிகள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது. வசந்திக்கு பசிக்க ஆரம்பித்தது. கொண்டுவந்த பத்து ரூபாய்க்கும் இங்கு வந்த அரைமணி நேரத்தில் முறுக்கு, கிரீம் பிஸ்கட் , கல்கோனா, ஜவ்வு மிட்டாய் என்று வகை வகையாக வாங்கி தின்றாயிற்று. வெயில் வேறு மண்டையை பிளந்தது. இருந்த நாலைந்து மரத்தடியிலும் கூட்டம் நெருக்கி அடித்து நின்றுகொண்டிருந்தது.
குடிக்க வைத்திருந்த தண்ணி ட்ரம்மில் ஆள் ஆளுக்கு கைவிட்டு மொண்டு குடித்ததில் தண்ணீர் நிறம் மாறிக்கொண்டிருந்தது.
"ஏய், வர்றியா கடைக்கு போய் தண்ணி குடிச்சுட்டு வரலாம்." வசந்தி அமுதாவைக் கூப்பிட்டாள்.
"ஏ, அங்க பாரு ராணி அண்ணன் கபடி ஆடுறாங்க. நாங்க பாத்துக்கிட்டு இருக்கோம். கட அங்க தானே இருக்கு, நீ சீக்கிரம் ஓடிபோய் குடிச்சுட்டு வா."
ஹ்ம்! யாரும் வர்றமாதிரி தெரியல. வசந்தி கடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த அந்த ஒரே ஒரு கடையில் பிள்ளைகளின் கூட்டம் முண்டி அடித்துக்கொண்டிருந்தது. சும்மா தண்ணி மட்டும் எப்படி கேட்குறது?! காசுவேற இல்ல, வசந்தி வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டிருந்தாள்.
"ஹேய், என்ன இங்க முழிச்சுக்கிட்டு நிக்குற?!என்ன வேணும்?"
திடுக்கிட்டு திரும்பினாள் வசந்தி. ராசு அண்ணன்! முத்தாயி பாட்டியின் பேரன். இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கு.
"தண்ணி வேணும் அதான்..."
"சரி இரு வரேன்," ராசு அண்ணன் உள்ள போய் தண்ணியும் பிஸ்கட்டும் வாங்கித் தந்தது.
வசந்தி ஆர்வமாக சாப்பிட்டாள். போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.
"ஏய் வசந்தி எங்க தோட்டத்துக்கு வர்றியா?மாங்கா பறிச்சுத் தரேன். என் சைக்கிள் ல போலாம்."
வசந்தி அவங்க அப்பாவோடு ஒரு முறை ராசு அண்ணன் தோட்டத்துக்கு போய் இருக்கிறாள். நெல் மூட்டைகள் ஏற்றும் வரை அந்த மாமரத்தில் தான் ஏறி விளையாடிக்கொண்டிருந்தாள். வரும் போது ராசண்ணன் அப்பா கை நிறைய மாங்கா பறித்துத் தந்தார். ரொம்ப ருசியான மாங்காய்.
வசந்திக்கு ஆசையாக இருந்தது. "சரிண்ணா, போலாம்."
தோழிகள், விளையாட்டுப் போட்டி எல்லாம் மறந்து ராசு அண்ணனோடு சைக்கிள் பின் சீட்டில் ஏறிக்கொண்டாள். தோட்டத்தில் யாரும் இருக்கவில்லை. வெயில் கொளுத்தும் அந்த மதிய நேர கடும் அமைதி வசந்திக்குள் லேசான ஒரு திகிலை கொடுக்கத் தொடங்கியது.
"யாரும் இல்லையா அண்ணா?" கேட்டுக்கொண்டே மாமரம் நோக்கி நடக்க எத்தனித்த அவளை ராசு கூப்பிட்டான்.
"இங்க வா, ஏற்கனவே ரூம்ல நிறைய மாங்கா இருக்கு." அந்த தோட்டத்து கொட்டகைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.
கட கட என மாட்டு வண்டியின் சக்கரம் எழுப்பிய சத்தம் கேட்டு ராசு பதறி வெளியே ஓடி வந்தான். முதல் தவறின் பதற்றம் அவன் கைகளின் நடுக்கத்தில் தெரிந்தது. முழித்துக்கொண்டு நின்றவனிடம்,
"தம்பி, அப்பா இல்லையா? வைக்கோல் அள்றதுக்கு வரசொன்னார். அதான்... "
"பாப்பா யாரு? தங்கசிங்களா??"
திடுக்கிட்டு திரும்பிய அவன் வசந்தி கொட்டகை வாசலில் நிற்பதைக் கண்டான். கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. பயத்தில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பேய் அறைந்ததைப் போல இருந்த அவளைப் பார்த்து
"யாருங்க, சொந்தக்கார பொண்ணா?"
பதில் சொல்லாமல் இருந்த ராசுவிடம் அவர் தன் அனுமானங்களை கேள்வியாக்கிக் கொண்டிருந்தார்.
"ஆமாம். மாங்கா கேட்டுது, அதான்... வீட்டுக்குப் போய் அப்பாவ வரசொல்றேன்." சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே போய் நான்கு மாங்காய்களை எடுத்து வந்து அவள் கையில் திணித்தான்.
"வா போலாம்."
ராசு சைக்கிளை நகர்த்தினான்.
"போ பாப்பா, போய் வண்டில ஏறிக்கோ," சொல்லி விட்டு அவர் வண்டி மாடுகளை அவிழ்த்துவிட நகர்ந்தார்.
செலுத்தப்பட்டவள் போல வசந்தி சென்று சைக்கிளில் ஏறிக்கொண்டாள். சைக்கிள் ஆள் அரவமற்ற அந்த வறண்ட பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாதையோர செடியில் இருந்த சிறு மலர்கள் வெயிலின் கோரமுகம் கண்டு வாடி தலை சாய்த்திருந்தன.
வசந்தி தன் கையில் இருந்த மாங்காய்களை நழுவவிட்டாள். அவை உருண்டு ஓடி பாதையோர முட் புதர் ஒன்றில் மோதி மறைந்தது.
********